Skip to main content

'2000 ஏக்கர் கோவில் நிலம் 'ஸ்வாஹா'-தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை குற்றச்சாட்டு

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
nn

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத்துறை நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பொழுது கோவிலின் ஆண்டு வருமானம் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால் அதன் பின்னர் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்கு கோவில் வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் அந்த கோவிலுடைய வருவாய் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது  தீட்சிதர்கள் தரப்பில் கோவிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கு விவரங்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'இந்த அறிக்கையை தாங்கள் கேட்கவில்லை. இது வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கை. நாங்கள் 'புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட்' என்று சொல்லக்கூடிய முழுமையான கணக்கு விவரங்களை கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு  தீட்சிதர்கள தரப்பில், முழுமையான கணக்கின் புத்தக வால்யூம் அளவு பெரியதாக இருக்கும். அதனால் தற்பொழுது தாக்கல் செய்வது சிரமம் என்று தெரிவித்தனர்.

கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறையின் நிர்வாகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் கோவிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் 3,000 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், அதற்கான அறிக்கைகள் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 2,000 ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். 2,000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்திற்கு குறைவாகவே வருமானம் வருவது மற்றும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை கணக்கில் சேர்க்காதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், 2017-18 ஆம் ஆண்டில் இருந்து 2021-22 ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, கோவிலுக்கு சொந்தமாக தற்பொழுது எவ்வளவு பரப்பளவு நிலம் உள்ளது என்பது குறித்து அறநிலையத்துறை தாசில்தார் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கை அக்டோபர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சார்ந்த செய்திகள்