
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சென்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “டிசம்பர் 9ஆம் தேதி சட்டமன்றம் கூட இருக்கிறது. இந்த இந்த கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குரலைக் கேட்பதற்குத் தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் ஆவலோடு இருக்கின்றோம். மீண்டும் அவர் மக்கள் பணிக்குத் திரும்புவார். மருத்துவர்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.