![Dikshitars against erecting flagpole in Chidambaram temple despite giving approval letter](http://image.nakkheeran.in/cdn/farfuture/G6m0pFpBPG2oxceshiTpi-IzIumjy2SIjf8MvPlmqKM/1730702428/sites/default/files/inline-images/27_85.jpg)
சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோவில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. நடராஜர் கோயிலில் நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியில் கொடிமரம் அமைந்துள்ளது. இந்த கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. அதை மாற்றி அமைப்பதற்கு கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரத்திற்கு படையல் செய்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று(நவ.3)இரவு சுமார் 8 மணி அளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு படையல் செய்தனர். அப்போது அங்கிருந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு கோவில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் எந்த பணியும் செய்யக்கூடாது என்று கூறி கொடி மரத்தை சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
![Dikshitars against erecting flagpole in Chidambaram temple despite giving approval letter](http://image.nakkheeran.in/cdn/farfuture/KtDKb3k6jGUzklfcWkhZwETuBWkw6JPeg4k0eiwAPUU/1730702465/sites/default/files/inline-images/26_92.jpg)
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி லா மேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். எந்த முடிவும் எட்டவில்லை. இந்த நிலையில் நவம்பர் நாலாம் தேதி காலை கொடிமரம் அமைப்பதற்காக இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் அறநிலைத்துறையினர் காவல் துறையினர் கோவிலுக்கு வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழமை மாறாமல் கொடி மரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இதனைக் கடிதம் மாக வழங்க வேண்டும் எனக் கூறினார்கள். அதற்கு இந்து அறநிலையத்துறையினரும் தீட்சிதர்கள் கூறியவாறு கடிதம் வழங்கினார்கள். பின்னர் இதனையும் ஏற்க மறுத்து தீட்சிதர்கள் கொடிமரம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.