கோவை மாவட்டம், ஈச்சனாரியில் இன்று (24/08/2022) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற அரசு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தி.மு.க. அரசு செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆட்சி; கொளத்தூரை போலத்தான் அனைத்து தொகுதிகளையும் கண்காணிக்கிறேன். தி.மு.க. அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என பொத்தாம் பொதுவாக சிலர் கூறி வருகின்றனர்.
தன்மானமில்லாத, இனமானம் என்னவென்று தெரியாத கூட்டம் தான் இன்று தி.மு.க. அரசை விமர்சிக்கிறது. தி.மு.க.வை விமர்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் வந்து பேச வேண்டும்; பேட்டி கொடுத்துவிட்டு ஓடி ஒளியக் கூடாது. யார் பாராட்டையும் எதிர்பார்த்து நான் செயல்படவில்லை; மக்களின் பாராட்டுகள் எனக்கு போதும். என்னை எதிர்த்தால்தான் நான் மேலும் மேலும் செயல்படுவேன்; மக்களுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்க விட மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.