Skip to main content

தர்பார் பட விநியோகஸ்தர்கள் மீதான புகார் வாபஸ்!- ஏ.ஆர்.முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கொலை மிரட்டல் விடுத்த தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் புகார் எழுப்பினர். இதையடுத்து, கடந்த 3-ஆம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக, விநியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த 25 அடையாளம் தெரியாத நபர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

DARPAR FILM DISTRIBUTORS AR MURUGADOSS CHENNAI HIGH COURT

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் இயக்குனராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
 

இந்த வழக்கு நேற்று (17/02/2020) மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு 15 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குனர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதனை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

DARPAR FILM DISTRIBUTORS AR MURUGADOSS CHENNAI HIGH COURT

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது. பின்னர், சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் எனத் தெரிவிப்பது  கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்தார். மேலும், நீங்கள் நினைத்தபடி சென்னை உயர்நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, பின்னர் முருகதாஸ் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்