சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (02/12/2020) காலை 'புரெவி' புயலாக வலுப்பெற உள்ளது. நாளை (02/12/2020) மாலை அல்லது இரவில் இலங்கையைக் கடந்து புயல் குமரிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும்.
இதனால் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 4- ஆம் தேதி வரை) மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தென்காசி, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (02/12/2020) அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 3- ஆம் தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.