Skip to main content

சவ ஊர்வலத்தில் வீசப்பட்ட மாலையால் இளைஞர் உயிரிழப்பு

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

 Cuddalore youth passes away bike accident

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள எல்.என் புரம் பகுதியில் வசிப்பவர்கள் மோகன் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ராஜ்குமார் (32) மற்றும் ராஜ்கமல்(30) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜ்குமார், இன்ஜினியரிங் படித்துவிட்டு, தனது மனைவியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் ராஜ்கமலுக்கும்  வேப்பூரை சேர்ந்த இன்ஜினியர் குணசுந்தரிக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

 

குணசுந்தரி மற்றும் அவரது மாமியார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன் தினம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினர். வீட்டுக்கு செல்வதற்காக சுந்தரி தனது கணவர் ராஜ்கமலுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதன்பிறகு இருசக்கர வாகனத்தில் பஸ் நிலையம் வந்த ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் தனது தாய் விஜயலட்சுமியை அழைத்துச் செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது தனது தாய் விஜயலட்சுமி சென்னை - தஞ்சாவூர் சாலையில் மேம்பாலத்தில் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். உடனே தாயாரை வண்டியில் அழைத்து செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது அந்த வழியாக சவ ஊர்வலம் சென்றுள்ளது. அந்த ஊர்வலத்தில் சென்றவர்கள் சவத்தின் மீது போடப்பட்டிருந்த மாலைகளை சாலை முழுவதும் நீண்ட தூரத்திற்கு வீசியிருந்தனர்.

 

மழை பெய்து விட்டிருந்த நிலையில்  சாலையில் மலர் மாலைகள் ஊறிப் போய் கிடந்துள்ளது. அதில் ஒரு மாலை ராஜ் கமலின் இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அவரை நிலை தடுமாற வைத்தது. இருசக்கர வாகனம் ராஜ் கமலின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதியுள்ளது. இதில் ராஜ்கமல் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கண்ணெதிரே மகன்  இறந்ததைக் கண்டு அவரை தாய் கதறி அழுதுள்ளார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு சவ ஊர்வலத்தின் போது சாலையில் வீசப்பட்ட மலர் மாலையில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, நகரின் முக்கிய சாலையில் சவ ஊர்வலம் செல்லும் போது சவத்தின் மீது கிடக்கும் மாலைகளை சாலை நெடுக வீசக்கூடாது என்று வருவாய் துறை காவல் துறை நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு சாலையில் மாலை வீசுவது நிறுத்தப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் மீண்டும் சாலையில் மாலை பூக்களை வீசி செல்வது தொடர்ந்து வருகிறது.  இந்த விபத்தில் திருமணமாகி நான்கு  மாதமான   ராஜ்கமல் உயிரிழந்த சம்பவம் பண்ருட்டி நகர மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் விவசாய அறுவடை காலங்களில் தானியங்களை சாலைகளில் கொண்டு வந்து சுத்தம் செய்வது அதை காய போடுவது தானியங்கள் மீது வாகனங்கள் ஏறி செல்லாமல் இருப்பதற்காக பெரும் பெரும் பாறை கற்களை சாலை நடுவில் தடுப்பு அறன்களாக வைப்பது இது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இதில் சாலையில் தடுப்புக்கு வைக்கப்பட்ட கற்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

 

சாலையில் விவசாய விளை பொருட்களை சுத்தம் செய்வது, காய வைப்பது தானியங்களில் வாகனம் செல்லும் போது  இருசக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி வழுக்கிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்களை ஏற்படுத்துவதும் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. எனவே சாலைகளில் தானியத்தை சுத்தப்படுத்தவோ, காய வைக்கவோ கூடாது என்றும், சாலையில் செல்லும்  சவ ஊர்வலத்தின் போது மலர் மாலைகளை வீசுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் அதை காவல்துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அப்பாவி பாவிகள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.