Skip to main content

குடிப்பதற்கு பணம் இல்லாததால் கணவரின் கீழ்த்தரமான செயல்..! காவல்துறையால் கைது..

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

Cuddalore police arrested jeyamani

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பண்ருட்டியில் பூக்கடை ஒன்றில் வேலை செய்யும் எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை (எ) ஜெயமணி (31) என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்தற்கு அடிமையான ஏழுமலை, சரியாக வேலைக்குச் செல்வதில்லை. இதனால் வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார்.


கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஜெயமணி சத்து மாத்திரை என்ற பெயரில் சில மாத்திரைகளை சாந்தியிடம் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்டதும் சாந்தி மயக்கமடைந்துள்ளார். மனைவி மயங்கி கிடந்த நிலையில் வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பரான சுந்தரமூர்த்தி என்பவரை வரவழைத்து தனது மனைவியிடம் உறவுகொள்ள சொல்லியுள்ளார். மயக்கம் தெளிந்த மனைவி நடந்த சம்பவத்தை அறிந்து கணவருடன் சண்டை போட்டுள்ளார்.

 

இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் இருந்த ஜெயமணி, தன்னுடன் பூ வியாபாரம் செய்யும் மற்றொரு நண்பரான மணிகண்டன் (26) என்பவரை அழைத்து தனது மனைவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள கூறியுள்ளார். மறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி சாந்தி, கணவன் ஏழுமலையை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கும் கணவன் ஏழுமலையின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் சாந்தி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், தனது கணவர் குடும்பம் நடத்தாததால் அவரது நண்பர்களை அழைத்துவந்து தன்னை தவறான பாதையில் நடத்த வற்புறுத்துகிறார். மீறினால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் மிரட்டுகிறார். எனவே ஏழுமலை உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

 

அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஏழுமலை, சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழுமலை குடிக்கப் பணம் இல்லாததால், தனது மனைவி அழகாக இருப்பார் அப்படி, இப்படி என அவருடன் இருக்கும் மற்ற நண்பர்களுக்குத் தெரிவித்து, அவர்களிடம் பணம் வாங்கி குடித்துள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்கும்போது 'தற்போது தன்னிடம் பணம் இல்லை. வேண்டும் என்றால் தனது மனைவியுடன் தகாத முறையில் உறவு வைத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறி இதுபோன்று தொடர்ந்து தவறான செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்