
சிதம்பரம் அருகே உடையான்மேடு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி. இவரது மனைவி ஆகிய இருவரும் திருவாரூர் அருகே திருச்சேறை கிராமத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாயில் பணியாற்றிய போது இவர்களை கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். இவர்கள் பணியாற்றியபோது பெய்த மழையில் 13,000 செங்கல்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாலாஜியும், அவர் மனைவியும் தான் எனக்கூறி அதற்கான தொகையைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதற்கு பயந்து அவர்கள் சொந்த ஊரான உடையான்மேட்டிற்கு வந்துள்ளனர். இதனை அறிந்த செல்வகுமார் அவர்களை வீட்டிற்குத் தேடிவந்து பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் பாலாஜியின் பாட்டி 60 வயது மூதாட்டியை அழைத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிபிஎம் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமார் மழையில் நனைந்த செங்கல்களுக்கு பணம் தர வேண்டும் என பாலாஜி மற்றும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் சுனில்குமார், மூத்த உறுப்பினர் கற்பனைச்செல்வம் உள்ளிட்ட உடையான்மேடு இருளர் சமூக மக்கள் என அனைவரும் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் சமாதானம் செய்து சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியரிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். இதில் மூதாட்டியை சட்டத்திற்கு புறம்பாக அழைத்துச் சென்றது, மழையில் நனைந்த செங்கல்களுக்கு பணம் கேட்டு மிரட்டி கொத்தடிமைகளாக வைத்துள்ளதற்கு செங்கல் கால்வாய் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயில் பணியாற்றியபோது வாரத்திற்கு ஒருமுறை ரூ 1000 வழங்கிவிட்டு 2 வருடம் வேலை வாங்கியுள்ளனர். இவர்கள் வேலை செய்த நாட்களை கணக்கீட்டு உரியக் கூலியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு சம்பந்தப்பட்ட செல்வகுமாரை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதனால் அனைவரும் கலந்து கொண்டனர்.