திருப்பத்தூர் மாவட்டத்தில் பல முறை எச்சரித்தும் அதிகளவில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றியபடியே இருப்பது காவல்துறையினரை கோபப்படுத்தியுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மார்ச் 27ந்தேதி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் நகரங்களில் வலம் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர், சாலைகளில் பலரும் இருசக்கர வாகனத்தில் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வாணியம்பாடியில் ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் செல்வதை பார்த்துவிட்டு தனது வாகனத்தை நிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி விசாரணை நடத்தியவரிடம், மருத்துவமனை போகிறோம் என தாயும் – மகனும் கூறியுள்ளனர். மருத்துவமனை போவதாக இருந்தால் தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு செல்ல வேண்டும், மருத்துவமனையில் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பினார்.
அவர் பயணம் செய்த வழிகளில் உள்ள கிராமங்களில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள், ஆண்கள் அமர்ந்து பேசுவது, கிராமப்புறங்களை இணைக்கும் சாலைகளில் பலரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செல்வது என பார்த்துள்ளார். இதனால் ஒவ்வொரு பகுதி காவல்நிலையத்துக்கும் ஒரு வாய்மொழி உத்தரவை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்படி கிராமப்புறங்களில் வீடுகளில் இல்லாமல் சுற்றி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக அம்மா உணவகங்களில் சரியான உணவு கிடைக்க வழி செய்துள்ளார். அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படியுள்ளது என ஆய்வு செய்தார்.