Skip to main content

டால்மியா சிமெண்ட் ஆலையில் கழிவுகளை எரிப்பதனால் கரோனா அபாயம்!!! - கிராம மக்கள் எதிர்ப்பு 

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

Corona risk due to burning of waste at Dalmiya Cement Plant

 

அரியலூர் மாவட்டம், பளிங்காநத்தம் எல்லையில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலை நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகளை திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையால் பெண்கள் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் என பலருக்கும் கடுமையான மூச்சுத் திணறல், நெஞ்செரிச்சல், தொண்டையில் எச்சில் முழுங்க இயலாத நிலை என பல்வேறு உபாதைகளை டால்மியா சிமெண்ட் ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


நூற்றுக்கணக்கான லாரிகளில் வந்த கழிவுகளை கண்ட சுற்று வட்டார கிராம மக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் லாரிகளில் கொண்டு வந்த கழிவுகளை எரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார பெண்கள் அதிகாரிகளோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து லாரிகளில் வந்த கழிவுகளை எரிக்கும் ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் பணம் உங்களுக்கு, நோய் எங்களுக்கா எனவும் கூறினர். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிளாஷ்டிக் கழிவுகளை சிமெண்ட் ஆலை நிர்வாகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு கரோனாவை விரட்ட  பல்வேறு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டத்தக்க வகையில் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் விதிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முரணாக பிளாஷ்டிக் கழிவுகளை எரிப்பதனால் புவி வெப்பமடையும். மேலும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் கரோனா வரும் வாய்ப்பு அதிகம் உண்டு எனவும் அச்சம் தெரிவித்தனர். 

 

 


ஆலையில் இருந்து புகை அளவுக்கு அதிகமாக வெளியேறுவதாகவும் துணி கூட காய வைக்க முடியவில்லை எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆலை நிர்வாகத்தினரின் செயலைக் கண்டு கொள்வதே இல்லை எனவும் பேச்சுவார்த்தைக்கு வந்த கல்லக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, இராமலிங்கம் ஆகியோரிடம் கிராம மக்கள் கூறினர்.

இதனையடுத்து ஆலை நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கல்லக்குடி காவல்துறையினர் மனு ஒன்றை எழுதி தரும்படி கேட்டுக்கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கிராம மக்களும் கோரிக்கைகளை மனுவாக எழுதி தருவதாக கூறினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்