சினிமா போல் அரசியல் இல்லை என நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் வருகை குறித்து கார்த்தி ப சிதம்பரம் டுவிட்டரில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவிலோ.,"நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியலில் இருந்து அப்பாற்பட்டு, சமுகத்தை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சினிமா வசனங்களை போல் ஒரு வரியில் கருத்து சொல்வதை தவிர்த்து விட்டு ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அவர்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும்.

உதாரனமாக, GST,பணமதிப்பு இழப்பு, மதச்சார்பின்மை கொள்கை, அரசே டாஸ்மாக்கை நடத்துவது, தனியார்மயம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அவர்கள் இருவருடைய கருத்துக்கள் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேலோட்டமாக இருக்கும் நடிகர்கள் அரசியலில் தேவை இல்லை. அரசியலும், அரசை நிர்வகிப்பதும் எளிதான காரியம் இல்லை. அவர்களிடம் மாற்று அரசியல் சார்ந்த கொள்கைகள் இருந்தால் அதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்." என பதிவிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்துடன் நீண்ட நெடுங்காலமாக நட்பில் இருக்கும் ரஜினிகாந்தை கார்த்தி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.