Skip to main content

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
Chinnasalem

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாய கூலி தொழிலாளி, இவரது மகள் 20 வயது கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சென்னிமலை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது கவிதாவுக்கும், ஆத்தூர் அருகே உள்ள ராம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்த பாட்டப்பன் மகன் பாஸ் குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். 

 

இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் பஸ், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரிக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள காரணத்தினால் காதலர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடியாமல் பரிதவித்துள்ளனர். இருவரும் தங்கள் செல்போனில் மட்டுமே பேசி உரையாடி வந்துள்ளனர். இதனால் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்க்க முடியாத ஏக்கம் இருவரையும் வாட்டி வதைத்துள்ளது. இந்த பிரிவின் ஏக்கத்தை தாங்க முடியாது காரணத்தால் பாஸ் குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தன் காதலியை பார்க்க கவிதா ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் சைக்கிளில் ஈரியூர் காட்டுப்பகுதியில் உள்ள அருஞ் சோலையம்மன் கோயிலுக்கு சென்று உள்ளனர். அங்கு அம்மனை சாட்சியாக வைத்து கவிதாவுக்கு பாஸ் குமார் தாலி கட்டியுள்ளார். 

 

பின்னர் இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் தமது திருமணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதையடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து, தாங்கள் வைத்திருந்த செல்போன்கள் பணம், சாப்பிட்டது போக மிச்சமிருந்த மரவள்ளிக் கிழங்கு நாவல்பழம் ஆகியவற்றை கோயில் படிக்கட்டில் வைத்துவிட்டு இருவரும் கோயில் சிலைகளில் சுற்றப்பட்டிருந்த துணிகளை எடுத்து அவைகளை இணைத்து முடிச்சுப்போட்டு கோயில் வளாகத்தில் இருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 

இந்த நிலையில் நேற்று காலை கோயில் பக்கம் சென்ற கிராம மக்கள் சிலர், அங்கு இரண்டு பேரின் சடலம் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி இராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, கீழ்குப்பம் எஸ்ஐ ஏழுமலை, தனிப்பிரிவு ஏட்டு மோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

 

காதலர்கள் தற்கொலை குறித்து கவிதாவின் தந்தை ராமலிங்கம் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் இறப்பு இரு குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.