Skip to main content

பெண் சிசுக்களை கொல்லும் கும்பல் சுற்றிவளைப்பு! வீடு வீடாக சென்று ஸ்கேன் செய்தது அம்பலம்!! 

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

child incident clinic scan centre pregnancy womens

 

தர்மபுரி அருகே, வீடு வீடாகச் சென்று நவீன ஸ்கேன் கருவி மூலம் கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? என்று முன்கூட்டியே பாலினம் கண்டறிந்து சென்னதுடன், சட்ட விரோத கருக்கலைப்பிலும் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவருடைய மனைவி வனஜா (வயது 27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனஜா, மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஒருவேளை, மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்து விட்டால், வளர்த்து ஆளாக்குவது சிரமம் எனக்கருதிய அவர்கள், கருவை கலைக்கும் முடிவுக்கு வந்தனர். 

 

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று முன்கூட்டியே ஸ்கேன் செய்து பார்ப்பதும், பார்த்துச் சொல்வது குற்றம் ஆகும். அதனால், கமுக்கமாக இந்த காரியத்தைச் செய்துவிட தீர்மானித்த வனஜாவும், கணவரும், இது தொடர்பாக சில புரோக்கர்களை அணுகியுள்ளனர். 

 

இந்நிலையில் புரோக்கர் ஒருவர், வனஜாவை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனையில், அவருடைய வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வனஜாவின் ஒப்புதலின்பேரில், பெண் சிசுவை வயிற்றிலேயே கலைத்து விடுவதற்கான ஏற்பாடுகளையும் புரோக்கர்கள் செய்தனர். 

 

சட்ட விரோத காரியம் என்பதால், வனஜாவை கண்களைக் கட்டி, ஒரு காரில் கருக்கலைப்பு செய்யப்படும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மே 14- ஆம் தேதி கருக்கலைப்பு செய்துள்ளனர்.  இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாள்களில் வனஜாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வனஜா அனுமதிக்கப்பட்டார்.  

 

அங்கு நடந்த பரிசோதனையில், வனஜாவுக்கு கருக்கலைப்பு செய்த கும்பல், சிசுவின் தலையை மட்டும் கர்ப்பப்பையை விட்டு வெளியே எடுத்திருப்பதும், சிசுவின் பாதி உடல் பாகங்கள் கர்ப்பப் பையிலேயே தங்கிவிட்டதும் தெரிய வந்தது. அதனால்தான் சிசுவின் அழுகிய உடல் பாகங்களால் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

 

பின்னர், கர்ப்பப்பையில் இருந்த சிசுவின் எஞ்சிய உடல் பாகங்களை அப்புறப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தனர். 

 

மேலும் இதுபற்றி மருத்துவர்கள், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு தகவல் அளித்தனர். கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரிக்க, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) கனிமொழி தலைமையில் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. 

 

இது ஒருபுறம் இருக்க, மே 28- ஆம் தேதி, தர்மபுரி ராஜாபேட்டை ஏரிக்கரை பகுதியில் வெங்கடேசன் என்பவருடைய வீட்டில் 6 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கனிமொழி, தர்மபுரி நகர காவல்நிலைய ஆய்வாளர் நவாஸ், எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தேகத்திற்குரிய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். 

 

அந்த வீட்டில் ஸ்கேன் உபகரணம் மூலம் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என முன்கூட்டியே பாலினம் கண்டறிந்து கூறி வந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக கருக்கலைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வீட்டில்தான், வனஜாவுக்கும் ஸ்கேன் பரிசோதனையும், கருக்கலைப்பும் நடந்திருப்பதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து அந்த மையத்தில் வேலை செய்து வந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பத்தூர் ராஜமங்கலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவசக்தி மனைவி ஜோதி (வயது 33), தேவராஜ் மகன் கார் ஓட்டுநர் சதீஸ்குமார் (வயது 38), கோவிந்தசாமி மகன் ஆட்டோ ஓட்டுநர் சுதாகர் (வயது 37), தர்மபுரி அழகாபுரியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செவிலியர் கற்பகம் (வயது 38), பாப்பாரப்பட்டி அண்ணா காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரிதா (வயது 40), தர்மபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆட்டோ ஓட்டுநர் குமார் (வயது 38), செட்டிக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் (வயது 33) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

 

இவர்களில் சதீஸ்குமார் போலி மருத்துவராக செயல்பட்டு வந்திருப்பதும், ஏற்கனவே இதேபோன்ற சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் டி.எஸ்.பி. வினோத் விசாரணை நடத்தினார். இதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. 

 

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய, இந்த கும்பல் ஒரு கையடக்க நவீன ஸ்கேன் கருவியை பயன்படுத்தி வந்துள்ளது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள தம்பதியினர், சட்ட விரோதமாக கருக்கலைப்புக்கு தயாராக உள்ள பெண்களை பிடித்து வருவதற்காகவே ஒவ்வொரு ஊரிலும் கமிஷன் அடிப்படையில் புரோக்கர்களை நியமித்துள்ளனர். 

 

நவீன ஸ்கேன் கருவி மூலம் பாலினம் அறிந்து கொள்ள 8 ஆயிரம் ரூபாயும், சட்ட விரோத கருக்கலைப்புக்கு 20 ஆயிரம் ரூபாயும் வசூலித்து வந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருமணத்திற்கு முன்பே மற்றும் தவறான தொடர்பில் கர்ப்பமடைந்த பெண்கள், சிறுமிகளுக்கும் இந்த கும்பல் திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர். அதுபோன்ற கருக்கலைப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

 

இந்த கும்பலிடம் இருந்து நவீன ஸ்கேன் உபகரணம், ஆட்டோ, கார் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கும்பலை தர்மபுரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்து வந்தன. தமிழக அளவில், தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில்தான் அதிக குழந்தைகளும் சேர்க்கப்பட்டன.

 

இந்நிலையில், படிப்படியாக தர்மபுரியில் பெண் சிசுக்கொலைகள் குறைந்து வந்தன. ஆனால் தற்போது பிடிபட்ட கும்பலை வைத்துப் பார்க்கும்போது, கருவில் உள்ளது பெண் சிசு என்று சட்ட விரோதமாக தெரிந்து கொண்டு, கருவிலேயே அதை கலைத்து வந்திருக்கலாம் என்றும், அதனால்தான் பெண் சிசு கொலைகள் குறைந்தது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.