Skip to main content

ஆம்புலன்சில் 'கஞ்சா' கடத்தல்! - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

Young people caught smuggling drug in a modern way

 

இலங்கைக்கு வேதாரண்யம் வழியாக ஆம்புலன்சில் நூதன முறையில் கஞ்சா பண்டல்களை கடத்திய சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பண்டல்களையும் நாகை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

வேதாரண்யத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தோப்புத்துறை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸார், அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த ஆம்புலன்ஸில் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாப் பொட்டலங்கள் பண்டலாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

 

Young people caught smuggling drug in a modern way

 

இதையடுத்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட சென்னை அயனாவரம் வில்லிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில் இருந்த போலீஸாரிடம் கேட்டபொழுது, “தேர்தலுக்காக வாகனசோதனையில் இருந்தோம், அப்போது கஞ்சா கடத்தி வருவதாக எங்களுக்கு தகவல்வந்தது. அதன்பிறகு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தோம். அப்போது அதிவேகமாக, அப்துல்கலாம் படத்தையும், மேதகு சுபாஷ் சந்திரபோஷ் படமும் பதிக்கப்பட்ட வித்தியாசமான ஆம்புலன்ஸ் வந்தது, அதை எதார்த்தமாகவே நிறுத்தினோம், அந்த வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. 

 

Young people caught smuggling drug in a modern way

 

சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வந்து, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்” என்கிறார்கள். உயிர்காக்கப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்சை, கஞ்சா கடத்த திட்டமிட்டுப் பயன்படுத்தியது போலீஸாரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.