Skip to main content

அதிமுகவினரைக் கண்டால் பிச்சைக்காரர்கள் ஓடி வருவார்கள்!” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
rajendrabalaji


ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “தமிழகத்திலேயே கல்வியில் சிறந்து விளங்குவது நாடார் சமுதாயம்தான்.” என்று நாடார் சமுதாயத்தினரைப் பாராட்டினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான், ரவுடிகள் வெளி மாநிலங்களுக்கு ஓடுகிறார்கள். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக அரசின் உரிமைகள் மீட்டெடுக்கப்படும். டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம்தான் குக்கர் சின்னம் ஒதுக்கும் முடிவை எடுத்தது. அவரது கட்சி அதிமுகவுக்கு போட்டியாக இருக்காது.” என்றார்.

விருதுநகரில் அதிமுக மாவட்ட மகளிரணி நடத்திய மகளிர் தின விழாவில் மைக் பிடித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையிலும் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக அழிந்துவிடும் என்று சிலர் கூடி பேசுவார்கள்; சேர்ந்து பேசுவார்கள். அப்படி பேசுபவர்கள், கடைசியில் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், அதிமுகவினர் நாங்கள் கூடி பேசுவோம்; சேர்ந்து பணியாற்றுவோம்; வெற்றி பெறுவோம்; கோட்டையை ஆள்வோம். மக்களுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மை; கொடுக்கின்ற எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு. ரோட்டில் செல்லும் பிச்சைக்காரர்கள்கூட, அதிமுக கரை வேட்டியைக் கண்டால் ஓடி வந்து தர்மம் கேட்பார்கள். அந்த அளவுக்கு தர்ம சிந்தனை உடையவர்கள் அதிமுக தொண்டர்கள்.” என்று உரையாற்றினார்.

‘ரஜினி இன்னொரு எம்.ஜி.ஆர். ஆகிவிடுவாரோ?’ என்று அதிமுகவினருக்கே சந்தேகம் வலுத்துள்ள நிலையில், ‘அட, போங்கப்பா.. நம்ம கட்சியில் எல்லாருமே எம்.ஜி.ஆர்.தான்! வள்ளல்கள்தான்!’ என்கிற ரீதியில் பேசி, அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

சார்ந்த செய்திகள்