Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகக் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2 ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து, பலரை கைது செய்துள்ளனர்.

 

The bail plea of ​​a trio who had passed the TNPSC exam was dismissed


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர் விமல்குமார், குரூப் 4 தேர்வில் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவேல்முருகன், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதிஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, விமல்குமார், 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்றதாகவும், திருவேல்முருகன் 7 லட்சம் ரூபாயும், நிதிஷ்குமார் 6 லட்சம் ரூபாயும் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் எனவும் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கவுரி அசோகன் வாதிட்டார்

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்