Skip to main content

கடனைக் காரணம் காட்டி கஜா இழப்பீடு பறிப்பு: வங்கிகள் மீது நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
gaja storm




கடனைக் காரணம் காட்டி கஜா புயலுக்கான இழப்பீடு தொகையை பறித்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை, காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகள் முடக்கி வைத்துள்ளன. கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களிடம் வங்கிகள் கெடுபிடி காட்டுவது கண்டிக்கத்தக்கது.
 

 

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் சிதைத்திருக்கிறது.  வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள், வாழ்வதற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு  இருக்கிறார்கள். சேதமடைந்த வீடுகளை சரி செய்வதற்கே லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.10,000 மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படியே அந்தத் தொகை பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


 

ஆனால், ஏற்கனவே பயிர்க்கடன் மற்றும் கல்விக்கடன் வாங்கிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள இந்தத் தொகையை வங்கி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. பயிர்க்கடன்,  கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்ததாதால், நிலுவைத் தொகை அதிகரித்து விட்டதாகவும், அதை செலுத்தாத வரையில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட ரூ.10,000 பணத்தை எடுக்க அனுமதிக்க முடியாது என்று காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள சில பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள்  கூறியுள்ளனர். சில வங்கிக் கிளைகளில் தமிழக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கியிருந்த பயிர்க்கடன் - கல்விக்கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

 

 

நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வங்கி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்சிக்கல் தீர்வதாக தெரியவில்லை. பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு செயல்படாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கையில் பணமின்றி, அடுத்த வேலை உணவுக்குக் கூட வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை நரகமாக கழிகிறது.

 

 

அரசின் சார்பில் வழங்கப்படும் உதவியைக் கொண்டு தான் சேதமடைந்த வீட்டின் ஒரு பகுதியையாவது சீரமைத்து வெயில் மற்றும் மழையிலிருந்து தற்காலிகமாகவாவது தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், வங்கிகளின் கெடுபிடியால் எதையும் செய்ய முடியாமல், கஜா புயல் தாக்கிய போது எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் தான் இப்போதும் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் உள்ளனர். அரசு வழங்கிய அரைகுறை உதவியும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.

 

 

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனாக இருந்தாலும், மாணவர்களுக்காக பெறப்பட்ட கல்விக் கடனாக  இருந்தாலும், அவை அரசால் தள்ளுபடி செய்யப்படாத பட்சத்தில் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில் யாருக்கும், எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், புயலால்  அனைத்தையும் இழந்து விட்டு, ஒருவேளை உணவுக்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு கிடைத்த பணத்தை வங்கிகள் பறிக்கத் துடிப்பது இரக்கமற்ற கொடிய செயலாகும். கந்துவட்டிக் காரர்கள் கூட இந்த அளவுக்கு மனிதாபிமானமில்லாமல் இருக்க மாட்டார்கள். எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பது எவ்வளவு கொடூரமான அணுகுமுறையோ, அதே அளவு கொடிய அணுகுமுறை தான் இதுவும்.

 

 

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக வழங்கப்பட்ட தொகை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சற்றும் இரக்கமின்றி,  அப்பாவி மக்களின் பணத்தை தர மறுத்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.