Skip to main content

கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Arthritis transplant for the first time at the Keelakarai Government Hospital!

 

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 55). இவர் சில ஆண்டுக்கு முன்பாக மாடிப்படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும் மூட்டு வலி தீர்வு ஏற்ப்படவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பாக வலி அதிகமான நிலையில் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இதையடுத்து, கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன், அவரை பரிசோதித்துவிட்டு அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மேலும் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதுபற்றி மருத்துவர் ஜவாஹிர் உசேன் கூறியதாவது, "பூங்கொடி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மூட்டுவலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை பரிசோதித்ததில் மூட்டு மிகவும் மோசமடைந்திருந்தது. இதையடுத்து அவரை தைரியப்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற்று மூட்டு மாற்று சிகிச்சையை முட நீக்கியல் நிபுணர் மருத்துவர்கள் பிரபாகரன், ஆதித்யா தாகூர், மனோஜ்குமார், மயக்கவியல் நிபுணர் ராஜேஸ்வரன் மற்றும் செவிலியர் ஆனந்தி மற்றும் ஜெயராணி ஆகிய மருத்துவ குழுவினருடன் இணைந்து சுமார் நான்கு மணிநேரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. தற்சமயம் அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீட்டிற்க்கு செல்லவுள்ளார். இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

 

கீழக்கரை மருத்துவர்களைப் பாராட்டிய நகர்மன்றத் தலைவர்!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சின்னமாயாகுளத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார். இது பல்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பரவியது. இதையடுத்து இன்று கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் கவுன்சிலர்கள், முகம்மது பாதுஷா, முகம்மது ஹாஜா சுஐபு, சூரியகலா, பைரோஸ் பாத்திமா, உம்முல் சல்மா பீவி, காயத்திரி, முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது, தோழர் மகாலிங்கம் ஆகியோர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன், முட நீக்கியல் மருத்துவர் பிரபாகரன், ஆதித்யா தாகூர், மனோஜ்குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர் ராஜேஸ்வரன் மற்றும் ஆனந்தி, ஜெயராணி உள்ளிட்ட மருத்துவ குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பூங்கொடி அவர்களை நலம் விசாரித்து போதுமான உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். இதுபற்றி நகர்மன்றத் தலைவி கூறியதாவது, "கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பல்வேறு கிராமபுற மக்கள் மற்றும் நகர்புற மக்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்துவது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். நாம் இதுபற்றி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சாமுத்துராமலிங்கத்திடம் தெரியப்படுத்த உள்ளோம். விரைவாக தரம் உயர்த்தபடும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.