சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 5 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. நகரின் முக்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிழல் கூடாரங்கள் காற்றில் பறந்தன. நேற்று ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக வைக்கப்பட்டிருந்த நிழல் கூடாரங்கள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழையில் கூடாரங்கள் பறந்தது. கூடாரங்கள் பறந்ததைக் கண்டு அதிர்ந்த ஆயுதப்படை காவலர்கள் பதற்றத்துடன் எழுந்து ஓடி, அவற்றை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றியுள்ள ருக்மணி, லட்சுமிபதி சாலையில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.