
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவும் தேனிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.