Skip to main content

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது! அன்புமணி

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:   ’’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுப்பது கண்டிக்கத்தக்கது.

 

a

 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலருக்கு இதுதொடர்பாக கர்நாடக காவிரி நீர்ப்பாசன கழகத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேகதாது அணை குறித்த விவரங்களை தெரிவித்திருப்பதுடன், அவற்றின் அடிப்படையில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், மேகதாது அணை குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழகத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மேகதாது அணையின் திட்ட மதிப்பு ரூ.5912 என்று அதன் வரைவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.9,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அணை கட்டப் படும் நிலப்பரப்பு 4716 ஹெக்டேராக இருக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது  அணை கட்டப்படும் நிலத்தின் அளவு 5252 ஹெக்டேராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நீர்த்தேக்கப் பரப்பும் 4996 ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேகதாது அணையின் மொத்தக் கொள்ளளவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 67.14 டி.எம்.சி என்ற அளவிலிருந்து அதிகரிக்கப் படக்கூடும் என்றும், இது 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக இருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது.

 

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.59 டி.எம்.சி ஆகும். இந்த நிலையில் மேகதாதுவில் 70 டி.எம்.சி அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளின் கொள்ளளவு 175 டி.எம்.சியாக இருக்கும். இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவை விட இரு மடங்காகும்.  கர்நாடகத்தின் நீர்த்தேக்கத் திறன் இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டால், கர்நாடகம் அதன் தேவைக்காக கூடுதல் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமே தவிர, நிச்சயமாக தமிழகத்திற்கு திறந்து விடாது.  அதனால் மேகதாது அணை கட்டப்பட்ட சில ஆண்டுகளில் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.

 

காவிரி ஆற்றின் முதல்மடை மாநிலமான கர்நாடகம், காவிரியின்குறுக்கே ஏதேனும் புதிய அணை கட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும். இது காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 09.06.2015 அன்று எனக்கு எழுதியக் கடிதத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், மேகதாது அணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் செய்திருப்பது ஏமாற்று வேலை ஆகும். இம்மனுவை ஆய்வு செய்வது நீதிமன்ற மதிப்பு என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.

 

மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கர்நாடக அரசு கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும். காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்விஷயத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் மேகதாது அணை ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தான் என்பதால் அதையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.