
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜாவகர் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப்போல் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு சத்தி ரோட்டில், சி.என்.சி. கல்லூரி எதிரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பேக்கரி ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்மசாலா, குட்கா, புகையிலை ஆகியவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு மேற்கொண்ட சோதனையில் ரூ. 3 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 305 கிலோ புகையிலை - குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, பவானி மெயின் ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பாலச்சந்தர் (37) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.