Skip to main content

“என் உழைப்பெல்லாம் போச்சே” ஆடுகளை பறிகொடுத்து கதறி அழுத மூதாட்டி

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

15 goats stolen  Viluppuram police investigation

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி எழுபது வயது மூதாட்டி குப்பு. வசதி வாய்ப்பு சொத்து பத்து இல்லாமல் வறுமையில் வாழும் குப்பு ஆடுகளை வளர்த்து, அதை விற்று தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். குப்பு 19 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர் மாலை வீட்டுக்கு அருகில் கொண்டு வந்து கட்டி விட்டு இரவு சாப்பிட்டு படுத்து தூங்கி விட்டார். அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அதனால்  திடுக்கிட்டு எழுந்த குப்பு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது ஒரு நான்கு சக்கர வாகனத்தில் சில மர்ம மனிதர்கள் அவரது ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குப்பு திருடன்.. திருடன்.. என்று சத்தம் போட்டுள்ளார். இவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட திருடர்கள் திருடிய ஆடுகளை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். குப்பு அடைத்து வைத்திருந்த 19 ஆடுகளில் 15 ஆடுகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். மிச்சம் இருந்த 4 ஆடுகளை கட்டிப்பிடித்துக் கொண்டு என் உழைப்பெல்லாம் போச்சே  என்று கூறி கதறி அழுதார் குப்பு. இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் குப்பு அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நான்கு சக்கர வாகனத்தில் வந்து குப்புவின் ஆடுகளை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.