தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த மழை 10 மணிவரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் அம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மிமீ மழையே சராசரியாக பொழிந்துள்ளது.
ஆனால் இன்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 137.6 மிமீ மழை பொழிந்துள்ளது. தரமணியில் 117.0 மிமீ மழையும் செம்பரம்பாக்கத்தில் 109.5 மிமீ மழையும் ஜமீர் கொரட்டூரில் 84 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பூந்தமல்லியில் 74 மிமீ மழையும் நந்தனத்தில் 117.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம் 82.0 மிமீ, நுங்கம்பாக்கம் 67.4 மிமீ என மழை பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் 50 மிமீ மழையும் காஞ்சிபுரத்தில் 79 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா போன்ற நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதேவேளையில் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. மேலும் புறப்பட வேண்டி காத்திருக்கும் விமானங்களும் தாமதமாக செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.