Skip to main content

வேகமெடுக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தை... கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தி.மு.க.!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

tamilnadu assembly election 2021 dmk party alliance speech invited

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தனது தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த தி.மு.க. தலைமை டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைத்தது. 

 

இந்த நிலையில், சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, உறுப்பினர் பொன்முடி ஆகியோருடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

 

அதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் நாளை (28/02/2021) மாலை 05.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் வருமாறு தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக மார்ச் 1- ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரிக்க மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்