
பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் கட்சியில் தலைவர் பதவியும், அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக கடலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் வெள்ளிக்கிழமை(20.6.2025) மாலை நடைபெற்றது. முன்னதாக கடலூர் மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுத்த பாமகவினர் சாலையில் விசில் சத்தத்துடன் ஆரவர கோசங்களை எழுப்பியவாறு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு அருகே உள்ள மண்டபத்திற்கு அவரை அழைத்து வந்தார்கள். இதில் கட்சியினர் அன்புமணிக்கு பலாபழத்தை கொடுத்தும் வரவேற்றார்கள்.

அன்புமணி ஜூலை மாதம் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டத்தையும் கூட்டி கட்சியில் தனக்கான செல்வாக்கை தந்தைக்கு நிரூபிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் ராமதாஸால் நீக்கப்பட்டவர்கள்.இவர்களுக்கு மாற்றாக ராமதாஸ் கடலூர் மாவட்ட புதிய செயலாளர்களாக கோபிநாத் (கிழக்கு), சுரேஷ் (மேற்கு), ஜெகன் (வடக்கு), சசீதரன்(தெற்கு) ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய மாவட்டச் செயலாளர்களே தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்தார்.
ராமதாஸால் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஒன்று கூடி கடலூரில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து பேசினார். மற்ற கட்சிகள் குறித்து எதையுமே பேசவில்லை. இவர் பேசுவதை பார்த்து கட்சியினர் மற்றும் சில மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து வந்தவர்கள், “சின்ன அய்யா சங்கிகள் கொடுத்த அசைமென்டை சரியாக பேசுகிறாரே...” என கிண்டலடித்து பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.அதேநேரத்தில் ராமதாஸ் தான் குலதெய்வம் அவரது பிறந்த நாள் ஜூலை 25-ல் தான் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளேன் என உணர்வு பூர்வமாக பேசி கட்சியினரிடம் கை தட்டல்களையும், விசில் சத்தத்தையும் அன்புமணி பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு அதிகார மையம் இருப்பதால், கட்சியின் நீடிக்கும் பிரச்னைகளால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் இதற்கு ராமதாஸ் என்ன பதில் அளிப்பார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.