Skip to main content

கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசு... வேல்முருகன் கடும் தாக்கு... 

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

T. Velmurugan


கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


அது ஒரு காலம் கண்ணே, கார் காலம்!.... இது கவிப்பேரரசின் ஒரு கவிதைத் தொடக்க வரி! அப்படித்தான் இருந்தது மேட்டூர் அணையில் காவிரி நீர் திறப்பதும். பல்லாண்டு காலமாகவே குறித்த நாளான ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டதில்லை. ஏதோ நல்வாய்ப்பாக இந்த ஆண்டு வரும் ஜூன் 12 அன்று அணை திறக்குமளவுக்குப் போதிய நீர் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் ஜூன் 12இல் அணை திறப்பதாக அறிவித்திருக்கிறது.


அதேநேரம், அணை திறக்கும் முன் அரசு செய்து முடித்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பணி ஒன்று உண்டு. அது காவிரியின் கடைமடைக் கால்வாய் வரையிலும் தூர் வாரும் பணியை ஏற்கனவே நிறைவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை விவசாயியும் பயனடைவார். சொல்லப்போனால், எந்த ஊர் சட்டப்படியும் சரி, சர்வதேச சட்டப்படியானாலும் சரி; கடைமடை விவசாயிதான் காவிரிப் பயனாளிகளில் முதன்மை உரிமையாளர்!


ஆனால் அணையில் போதிய நீர் இருப்பது தெரிந்தும் அ.தி.மு.க. அரசு இந்தத் தூர் வாரும் பணியை ஏற்கனவே செய்து முடிக்கவில்லை. அணை திறக்க 18 நாட்கள் இருக்கும் நிலையில்தான் தூர் வாரும் பணியையே அறிவித்தது. பணியை மேற்பார்வையிட பல்வேறு துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழு ஒன்றையும் நியமித்தது.


சிறப்புக் கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளுக்கு தத்தம் துறை சார்ந்த பணிகள் ஏதும் இல்லையா; அந்த அளவுக்கு அரசாங்கம் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர், நீர்ப்பாசனத்துறை செயலர் உள்ளிட்டவர்களே தூர் வாரும் இந்தப் பணியைக் கண்காணிக்கப் போதுமானவர்கள் என்பதே  பொதுமக்களின் கருத்தாகும்.


அப்படியென்றால் இப்படி ஏன் செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, வழக்கமான நடைமுறைதானே இது என்று மிக எளிதாகப் பதில் சொல்லிக் கடந்துபோய்விட முடியாது அரசு. கிட்டத்தட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது என்பதுதான் பதில்.
 


அப்படியென்றால் இந்தப் பணியைச் செய்து முடித்துவிட்டதாக படம் காட்டுவதும் பணம் பார்ப்பதும்தான் நோக்கமாக இருக்க முடியும். ஆக, ஒப்புக்காகவே இந்தத் தூர் வாருதல் என்று சொல்லலாம்தானே?


இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மணல் வாருதல்! மணல் வாருதல் விடயத்தில் சுற்றுச்சூழல் சட்டப்படி முறையான விதிகள் உள்ளன. ஆனால் ஆட்சியாளர்களுக்கு சட்டமாவது, விதிகளாவது?


கல்லணையில் இருந்து திருவையாறு வரை காவிரி வெண்ணாற்றில் மணல் வாரும் பணிக்கு உத்தரவாகியிருக்கிறது. உத்தரவு என்றால் சட்டப்படி அல்ல; சட்ட விரோதமாக!


பல்லாயிரம் கோடிகள் பெருமதியான திட்டம்; ஆனால் பல நூறு கோடிகள் வரும்படி மட்டும் அ.தி.மு.க.வினர் பெறும்படியான திட்டமாக வாய்ச்சொல் மூலமே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகமும் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.


இத்திட்டத்திற்குத் தலைமை அ.தி.மு.க.வின் எம்.பி. ஒருவர்தான் என்று சொல்லப்படுகிறது.


திருவையாறு முதல் திருக்காட்டுப்பள்ளி வரையிலும், திருக்காட்டுப்பள்ளி முதல் கல்லணை வரையிலும் மணல் வார அனுமதி. இந்த இரண்டு நபர்களும் அ.தி.மு.க.காரர்கள் இல்லை; ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கு கமிஷனை கறாராக வெட்டிவிட வேண்டும்.


கமிஷன் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேல் என்று தெரிகிறது. அது பொறுப்பான அ.தி.மு.க. நபர்கள் மூலம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 வண்டிகளும், ஒரு ஜே.சி.பி. பக்கெட்டுக்கு 2,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர், காவல்துறைத் தலைவர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் என இவர்கள் யாரும் கண்டும் காணாதிருக்குமாறும் சொல்லப்பட்டிருப்பதோடு, பிரச்சனைகள் என்று ஏற்பட்டால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள அதிகாரபூர்வமற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.


எதற்கும் நேரம் காலம் வேணும் என்பார்களல்லவா; அதன்படி மணல் வார நேரம், இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை. எங்கெல்லாம் மணல் வாருவது? வாய்பிருக்கும் இடங்களிலெல்லாம் தாராளமாக வாரிக்கொள்ளலாம். சரி. காலம்? அதாவது ஜூன் 22 க்குள் அள்ளிவிட வேண்டும்.


என்ன ஜூன் 22 வரை? ஜூன் 12 அணை திறப்பாச்சே?


அதற்குள் மணல் மொத்தத்தையும் வாரிவிட முடியாது; அதானால்தான் கூட 10 நாட்கள். அப்படியால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 12இல் அணை திறக்கப்படாது; நாட்கள் தள்ளிப்போகும் என்றாலும், அதையும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த ஆதரவற்ற விவசாயிகள்.
 

http://onelink.to/nknapp


ஆக, மேட்டூர் அணை திறப்பு என்னும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்: (1) ஒப்புக்காக தூர் வாருதல், (2) சட்டவிரோத மணல் வாருதல்; இப்படிக் கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.