Skip to main content

டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுதி? 

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

ddd

 

சசிகலா, வரும் 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனை அக்கட்சியினர் பெரிய அளவில் கொண்டாட உள்ளனர். அதிமுக - அமுமக இணையுமா என்ற விவாதங்கள் அரசியல் களத்தில் நடந்து வரும் வேளையில், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை என்று மோடி, அமித்ஷாவை சந்தித்தப் பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (19 ஜன.) தெரிவித்துள்ளார்.

 

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவினர் தங்கள் பலத்தைக் காட்டவும் தயாராகி வருகின்றனர். மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இதனை அக்கட்சியினர் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமமுகவில் சிலர் தெரிவித்துள்ளனர். 

 

ஏற்கனவே இந்தத் தொகுதியை அக்கட்சியினர் தேர்ந்தெடுத்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும், தினகரன் தங்குவதற்கும் கட்சி அலுவலகம் செயல்படுவதற்கும் வீடு பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், தினகரனுக்கு நெருக்கமானவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தினகரன். இதனால் அருகில் உள்ள உசிலம்பட்டியில் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால், வரும் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்