Skip to main content

செந்தில் பாலாஜி விவகாரம்; முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

senthil balaji issue cm mk stalin important meeting today

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.

 

இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது குறித்த ஆளுநரின் அறிவிப்பு குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும்,  செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்து இருந்தார். இதையடுத்து தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்து இருக்கும் நிலையில், வரும் காலங்களில் ஆளுநர்கள் இதுபோன்ற செயல்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இருப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தலைமைச் செயலக பணிகளுக்குப் பின்னர் திமுகவின் தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த சட்ட ஆலோசகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்