Skip to main content

“தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்..” சீமான் ஆவேசம்..! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Seeman opposed to open sterlite

 

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

 

இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அதனால், மதிமுக, விசிக, நாதக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், “கரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால், தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

மேலும், அந்த அறிக்கையில் அவர், “கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் கையாலாகாத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு, மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும். மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

 

தாமிரத் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அத்தட்டுப்பாடு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் கூறி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று வாதிட்டவர்கள், இக்கட்டான தற்காலச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க வேண்டும் எனக் கூறி வருவது முழுக்க முழுக்க ஏமாற்றுவாதமாகும். ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆட்பட்ட தூத்துக்குடி மக்கள், நாளும் அல்லல்பட்டு நின்றபோது அதனைத் துளியும் மதித்திடாது இலாப நோக்கில் சுற்றுச்சூழலைச் சீரழித்து, மக்களைத் துன்புறுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இன்றைக்கு மக்கள் உயிரின் மீது பரிவு காட்டுவதாகக் கூறுவது பச்சை சந்தர்ப்பவாதம் என்பதைத் தாண்டி வேறில்லை.

 

கரோனா காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட நோயாளிகளின் உயிர்களைக் காக்க, அவர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசிப்பது அபத்தமானது; அவமானகரமானது. இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக்கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக் காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா? ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? அநியாயமாக 14 உயிர்களைப் பறிகொடுத்து அதற்கு இன்னும் நீதி கிடைத்திடாச் சூழலில், அதனை எண்ணி நாளும் மனம் வெதும்பி நிற்கிற நிலையில், அவ்வேதனையின் சுவடு மறைவதற்குள்ளாகவே அதனைத் திறக்க முற்படும் வேலைகளைத் தொடங்குவது மிகப்பெரும் மோசடித்தனம். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவித்ததாக நீதிமன்றத்தால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஆலையை, சூழலியல் விதிகளை மீறி மன்னார் வளைகுடாவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஆலையை எதன்பொருட்டும் திறக்கக்கூடாது.

 

சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும். 14 உயிர்களைப் பலிகொண்ட அந்த ஆலையை எதன்பொருட்டும் திறப்பதெனும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் மண்ணின் மக்களின் மனநிலையாக உள்ளது. அதனை உணராது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்துவதும் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் போராடும்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசிக்காத இந்த அரசு, இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவான முன்நகர்வாகத்தான் கருதப்படும். தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை, தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பறித்தபோது, ‘தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரியாது’ எனக்கூறி வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர், இப்போது மறுபடியும் இத்தகைய படுபாதகச்செயலைச் செய்தால் அது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். தனக்கிருக்கும் அதிகார நெருக்கத்தையும், பணபலத்தையும் கொண்டு யாரையும் வளைத்துப் போட்டுவிடலாம் எனும் மமதையில் ஆலையை மீண்டும் திறந்துவிடக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வரிந்துகட்டி நிற்பதும், அதற்கு ஆதரவாக மாநில அரசு முன்முயற்சிகளை முடுக்கி விடுவதும் வெட்கக்கேடானது. தங்கை ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரைக் கண்முன்னே துள்ளத்துடிக்கப் படுகொலை செய்திட்ட அரசுகள், இன்றைக்குத் துளியும் மனச்சான்று இல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் பக்கம் நிற்கத் துணிவது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.