ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் பாகம சார்பில் போட்டியிட்ட கரிகாலன் பாமகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரும் பாமகவை சேர்ந்த இவரது ஆதரவாளர்கள் சிலரும் இணைந்தனர்.
![PMK member Joined DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/1YCl4jkn_n3-t76ScYhU1O4KGM0r62mxGmqVaTABQBw/1574147182/sites/default/files/inline-images/pmk%20in_0.jpg)
பாமக நிறுவனரின் அரசியல் நிலைப்பாடு சரியாக இல்லாததால் அக்கட்சியில் இருந்து விலகினேன் எனத் தெரிவித்துள்ளார். இவரிடம் பாமகவை சேர்ந்த பலரும், நாங்களும் திமுகவுக்கு வந்துவிடுகிறோம், கேட்டு சொல்லுங்கள் என தூதுவிட்டுள்ளார்கள் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
கரிகாலனுடன் திமுகவில் இணைந்தவர்கள் கூறும்போது, "கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்தாலும் ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி சாட்டையடி கேள்விகளை எழுப்பிய ராமதாஸ், தற்போது மத்தியில் ஆளும் பாஜகவின் ஆட்சி செய்யும் மக்கள் விரோத செயல்களையும், மாநிலத்தை ஆளும் அதிமுகவின் மக்களுக்கு எதிரான செயல்களுக்கு ஆதரவாக ராமதாஸ் அறிக்கை விடுவதும், சமூக வளைத்தளங்கான முகநூல், டுவிட்டர் பக்கங்களில் பதிவிடுவதுமாக உள்ளார். இது பாமகவினரியே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பாமகவில் இருந்து விலகுகிறோம்" என்றனர்.