
இன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலையத்தின் உள் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளி வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்கிறார். பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டரில் மதுரை வர இருக்கும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்துள்ளார். அவரை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர்.