Skip to main content

தி.மு.க. நடத்திய பல கொடிய குற்றங்கள்! முதலமைச்சர் எங்கே முரண்பாடாகப் பேசினார்? -பட்டியலிட்டுச் சாடும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

K. T. Rajenthra Bhalaji

 

‘ஒரு காவல் நிலையத்தைக்கூட நிர்வகிக்க முடியாமல், உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்..’ என, சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைகள் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

‘அ.தி.மு.க.-வின் புனிதத்தை, தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால், ஒருபோதும் பாழ்படுத்த முடியாது’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ - 

 

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை மகன் இருவரது உயிரிழப்புசம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் செயல்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினர், முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்திருக்கிறார்கள்.


குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவிஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டு, விரிவான, விரைவான விசாரணையை தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவு மேற்கொண்டு வருகிறது. இதனை, சாத்தான்குளம் பகுதிவாழ் மக்கள், மனதார வரவேற்றுள்ளனர். சில இடங்களில் இளைஞர்களும், பொதுமக்களும்  உணர்ச்சிப் பெருக்கில் பட்டாசுகளை வெடித்துத் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுப் பாராட்டியிருக்கின்றனர். ஆனால், இவையாவிற்கும் நேர்எதிராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக காவல் துறையின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருகிறார்.

 

முதலமைச்சர், ஜுன் மாதம் 24-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 22-ஆம் தேதி இரவு, பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் என்றும், பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் பென்னிக்சின் தந்தை திரு. ஜெயராஜ், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்றும், சிகிச்சையில் இருந்த ஜெயராஜ் 23.6.2020 அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் அவ்வறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து (அதாவது 24.6.2020 அன்று) இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்றும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வழக்குக் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்து, அதன் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26.6.2020 க்கு ஒத்தி வைத்தனர் என்றும்,  அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் அவர்களின் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். 


எந்த ஒரு குற்ற சம்பவத்தின் அடுத்த விநாடியிலேயே,  அதன் முழு விவரங்களும் வெளிவந்துவிடாது. முதற்கட்ட விசாரணை, சாட்சிகளைச் சேகரித்தல், சூழல் சார்ந்த ஆதாரங்களைத் திரட்டுவது, பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவது போன்றவற்றின் அடிப்படையில்தான், ஒரு குற்றத்தின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, வழக்கின் போக்கும், குற்றவாளிகளும் உறுதி செய்யப்படுகிறார்கள்.

 

அதிலும், குறிப்பாக காவல் நிலையங்களில் நிகழும் மரணங்களிலும், விசாரணையின் போது நிகழும் உயிரிழப்புகளிலும், முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் திரட்டப்படும் செய்திகள் ஆகியவற்றைக் கொண்டே, அது கொலையா? தற்கொலையா? இயற்கை மரணமா? என்பது உறுதி  செய்யப்படும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைதான்,  சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரது மரணத்திலும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் கனிவுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், மறைந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டதோடு, கல்வித் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்கள். மேலும் இச்சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனையை, உட்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தருவோம் என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விரைந்து நடத்தப்படும் வழக்காக, இவ்வழக்குக் கையாளப்படும் நிலையில், வழக்கு விசாரணைக்கு எவ்வித இடையூறோ, குந்தகமோ ஏற்பட்டுவிடாத அளவில், மதுரை உயர்நீதிமன்றத்தின் கருத்தறிந்து, இவ்வழக்கை மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும், முதலமைச்சர்  தெளிவுபடுத்தியுள்ளார். 


இதில், எங்கே தமிழக அரசு தவறிழைத்தது? எங்கே தமிழக காவல்துறை காலதாமதம் செய்தது? எங்கே முதலமைச்சர் முரண்பாடாகப் பேசினார்? எங்கே நீதி மறுக்கப்பட்டது? ஸ்டாலின், இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் செய்வதற்கென சில சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதற்கான திரைக்கதையை வடநாட்டு ஆளை வைத்து எழுதிக்கொண்டு, அரசின் மீதும், விசாரணை அமைப்புகளின் மீதும், பழிபோடுகிறது. அதற்கு பக்கபலமாக, தங்கள் குடும்ப ஊடகங்களை வைத்து பொதுமக்களிடையே அரசுக்கு அவப்பெயரை உருவாக்கிட, தி.மு.க. திட்டமிட்டு மலிவான அரசியலைச் செய்து வருகிறது. அதேவேளையில், தி.மு.க.-வாலும், அக்கட்சியினராலும் நடத்தப்பட்ட நெஞ்சம் பதறுகிற பல கொடிய குற்றங்கள் மற்றும் அது தொடர்பான வழக்குகளில் மட்டும் தி.மு.க. வாய்த் திறந்து பேசாத பாறாங்கற்களாகிப் போவது பரிதாபத்திற்குரியது.


உதாரணமாக, தி.மு.க. மகளிரணி பிரமுகர் பால் மலரின் படுகொலை, படுகொலை செய்யப்பட்ட தா. கிருட்டிணனின் வழக்கு, அண்ணாநகர் ரமேஷின் ஒட்டுமொத்த குடும்பமும் மர்மமாகச் செத்துப்போனது, பெரம்பலூர் சாதிக்பாட்ஷாவின் மர்ம மரணம் போன்றவற்றில் மட்டும் தி.மு.க.-வும், அதன் தலைமையும் பேச மறுப்பதும், வாய்மூடி மௌனியாய் இருப்பதும், அவ்வழக்குகளுக்கான நீதி நீர்த்துப்போக வேண்டும் என்று வியர்த்துப்போகும் அளவுக்கு விழிப்பதும் ஏன்? என்று ஸ்டாலின் விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாட்சிமைமிக்க நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் கொண்டு செல்லப்படும் வழக்கின் மீது அவதூறு விதைப்பதென்பது, மகுடத்தின் மீது வெறிபிடித்து அலைகிற ஒரு மனநோயாளியின் காரியமே. எனவே இனியும் தி.மு.க., மரணங்களை முன்வைத்து, தந்திர அரசியலையும், தரங்கெட்ட போக்கையும் தொடருமேயானால், அக்கட்சி விரைவில் மக்களால் மயானத்திற்கு அனுப்பப்படும் என்பது நிச்சயம். 

 

அன்றைய தி.மு.க. ஆட்சியில், சென்னையின் இதய பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில், உணவு விடுதி ஒன்றில் ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொன்னதற்காக, துப்பாக்கி எடுத்து ஓட்டல் ஊழியர்களைச் சுட்டவர், அதிகாரம் தாங்கி இருந்தவரின் அடர்த்தியான உறவினர் என்பதற்காக, ஒரு மூத்த காவல்துறை அதிகாரியையே சம்பவ இடத்திற்கு அனுப்பி, தடயங்களை அழித்ததோடு, அச்சம்பவத்தில் தப்பிப் பிழைத்த வடநாட்டு ஊழியர்களை மிரட்டி, வடநாட்டுக்கே வழியனுப்பி வைத்தவர்கள் யார் என்பதை இந்த உலகமும், உலக மக்களும் நன்கு அறிவார்கள். எனவே, தான் 'திருடி பிறரை நம்பாள்' என்னும் கதையாக, புரளி விதைப்பதும், புலனாய்வு புலிகள் போல தங்களை நினைத்துக்கொண்டு புளுகு மூட்டைகளை விதைப்பதும் ஆக்கம் அற்ற செயலாகும். அறம் கெட்ட அரசியலாகும்.

 

http://onelink.to/nknapp

 

அனைத்திந்திய அண்ணா தி.மு.க.,  ஆன்மீக நெறிகொண்டு நடைபோடுகின்ற அன்பியல் இயக்கம். நேர்மை, அறம், நியாயத்தின்பால் நடக்கின்ற புனித இயக்கம். இதன் புனிதத்தைத் தி.மு.க. போன்ற பாவமூட்டை கட்சிகளால் ஒருபோதும் பாழ்படுத்த முடியாது. எதுவரினும் எதிர்கொண்டு, எந்நிலையிலும் புண்ணியத்தின் வழியிலிருந்து பிறழாது, சட்டத்தின் வழியில், தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்துகிற எங்கள் எளிமையான சாமானிய முதல்வர், எடப்பாடியாரின் நல்லாட்சியினை நரி சூழ்ச்சிகளால் ஒருபோதும் களங்கப்படுத்த முடியாது'' எனக் கூறியுள்ளார். 

 

‘சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்‘ என்று, தமிழகமே கொந்தளித்துக் கிடக்கும் நிலையில், தி.மு.க.-வும், அ.தி.மு.க.-வும், ஒருவர் மீது ஒருவர், மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.