
கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “டெல்லியில் இருக்கும் மோடி ஒவ்வொரு நாளும் தமிழகத்தைப் பற்றி சிந்திக்கிறார். பிரதமர் என்னைப் பார்த்து காசி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தவர்களுக்கு குளிர் ஒன்றும் பிரச்சனை இல்லையே என்று கேட்கிறார். எந்த அளவிற்கு பிரதமர் யோசிக்கிறார்.
போனமுறை நடந்த போராட்டத்தில் ஒரு செங்கல்லைக் கூட எடுக்க விடமாட்டோம் என்று சொன்னோம். அரசு இங்கு வரும் பொழுது அன்னூரில் சாகும் வரை என் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன். உடம்பில் உயிர் இருக்கும்வரை ஒரு பிடி மண்ணை எடுக்க விடமாட்டேன். எத்தனை நாளாக இருந்தாலும் சரி. போட்டி போட்டு பார்த்துவிடலாம் என நீங்கள் இருந்தால் முன்னோடியாக தலைவன் என்ற முறையில் முதலில் நான் இங்கு அமர்வேன்.
முதல் நாள் இங்கு அரசு வரும் பொழுது இங்கேயே காலவரையற்ற நிபந்தனையற்ற உண்ணாவிரதம் இருப்போம். இன்றிலிருந்து இது உங்கள் பிரச்சனை அல்ல. எங்கள் பிரச்சனை” என்றார்.