Skip to main content

திமுக, அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டை அல்ல: கமலுக்கு பகிரங்க கடிதம்

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

திமுகவோ அல்லது அதிமுகவோ அசைக்க முடியாத இரும்புக் கோட்டையும் அல்ல. ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து உடனடியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் களம் காண வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். 

 

mnm



தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க. கமல்ஹாசன் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம் என்ற தலைப்பில் வெளியான அதில், 

 

"மக்கள் நீதி மய்யம்" கட்சித் தலைவர் மரியாதைக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம்.
 

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது எனவும், அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகள் எழுதி, இயக்கும் நாடகத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாங்கள் அறிவித்துள்ளது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது.
 

ஏனெனில் அந்த இருபெரும் கட்சிகளுக்கும், இது வரை அவர்களோடு மாறி, மாறி கூட்டணி வைத்து அவர்களின் முதுகில் சவாரி செய்து வந்த கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் சுமார் 4% வாக்குகளை அளித்தனர் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
 

கட்சி துவங்கி சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பொதுத் தேர்தலை சந்தித்து 4%வாக்குகளை பெற்றதை பலராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் அதற்கடுத்து வந்த இடைத்தேர்தலில் தமிழக ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி வாரி இறைத்த "பணமழைக்கிடையே நேர்மை நிலைநாட்டப்படாது" என்கிற அடிப்படையில் அந்த இடைத்தேர்தலை மக்கள் நீதி மய்யம் புறக்கணித்ததில் நியாயம் இருந்தது.


 

 

மேலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக மறக்கடிக்கப்பட்டிருந்த "கிராம சபை"யை தூசி தட்டி, தூக்கத்தில் இருந்த எதிர்க்கட்சிகளையெல்லாம் கிராமங்களை நோக்கி ஓட வைத்த பெருமை உங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பாத ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை நடத்திய தற்போதைய எதிர்க்கட்சியும் மாறி, மாறி நீதிமன்றம் சென்று, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இன்னும் சொல்லப்போனால் ஆளும், ஆண்ட கட்சிகளின் நாடகத்தின் இறுதிக் காட்சியாக நடைபெற இருக்கும் "தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும், மக்கள் நலப்பணியாற்றிட நீங்களும் வருவீர்கள்" என "மிகுந்த நம்பிக்கையோடு இருந்த தமிழக மக்களுக்கு தங்களின் அறிவிப்பு ஏமாற்றத்தையே பரிசாக தந்துள்ளது."


 

 

அது போல "சிறுபிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேராது" என்றும்,  "பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று" என மக்கள் நீதி மய்யம் குறித்து பொதுமக்கள் பேசுவது நமது காதில் சத்தமாகவே விழுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து அச்சப்பட அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்றாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது உங்களது கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 

மேலும் திமுகவோ அல்லது அதிமுகவோ அசைக்க முடியாத இரும்புக் கோட்டையும் அல்ல. அதே சமயம் அவர்களை எளிதாக எடை போடக்கூடாது என்பதையும் நன்கு உணர்ந்தவர் நீங்கள். சுயலநலமே நோக்கமாக கொண்டவர்கள் எல்லாம் அவர்கள் முதுகில் சவாரி செய்து அறுவடைகளை அள்ளிக் கொண்டிருக்க, நல்லவர்களும், புதியவர்களும் அவர்களை பார்த்து காரணங்களைச் சொல்லி கடந்து போவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல.

 

Ponnusamy


 

எனவே தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து உடனடியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் களம் காணச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது கட்சியை மக்களோடு மிகவும் நெருக்கமாக கொண்டு சென்று மிகப் பலமான உறவை ஏற்படுத்தும் அஸ்திவாரமாக அமைந்து அதுவே அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.