Skip to main content

“இனியும் அக்கா, தம்பியாக பயணிப்போம்...” - திருச்சி சூர்யா, டெய்சி பேட்டி

Published on 24/11/2022 | Edited on 25/11/2022

 

Let's travel as sister and brother'-Trichy Surya, Daisy interview

 

பா.ஜ.க.வின் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க. பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது அக்காவிற்கும் தம்பிக்கும் இடையே நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் என இருவரும் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தது பேசு பொருளாகியிருக்கிறது.

 

பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு திருச்சி சூர்யா வந்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டெய்சி சரணுக்கு போன் போட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அந்த ஆடியோ லீக்கான விவகாரம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

 

அந்த வீடியோவில் திருச்சி சூர்யா, அந்தப் பெண் நிர்வாகியை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசுகிறார். அந்தப் பெண் நிர்வாகி எவ்வளவு கேட்டுக்கொண்டும் அவரது நடத்தை குறித்தும் அவர் பா.ஜ.க.வில் பதவி பெற்றது குறித்தும் இழிவுபடுத்துவதோடு, பா.ஜ.க.வின் கேசவ விநாயகம் குறித்தும் மிகவும் மோசமாகப் பேசுகிறார். டெய்சியை அறுத்து விடுவேனென்றும், கொன்று விடுவேனென்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பென்றும் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.

 

டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்துமே ஆடியோவாக வெளியே வர, சமூக வலைத்தளங்களில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவிட்டனர். அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

 

பா.ஜ.க. நிர்வாகியான காயத்ரி ரகுராம், ஏற்கெனவே அண்ணாமலை மீது முட்டல் மோதலிலிருந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை இல்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து, பிரச்சனைக்குரியவர்களை விட்டுவிட்டுக் கேள்வியெழுப்பிய காயத்ரி ரகுராமின் பதவிகளை அடுத்த 6 மாத காலத்துக்குப் பறித்துவிட்டார் அண்ணாமலை.

 

ஆடியோ விவகாரத்தில் பெண் நிர்வாகிக்கு எதிராக சூர்யாவின் மோசமான கொலை மிரட்டல் பேச்சுக்கள் அப்பட்டமாகத் தெரிந்தும் கூட அவர்மீது காவல்துறையில் புகாரளிக்காத முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகக் கமிட்டி அமைப்பதாகவும் ஒரு வாரக் காலத்தில் விசாரணை முடிவு வந்ததும் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

bjp

 

என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இன்று பிரச்னைக்குரிய திருச்சி சூர்யாவும்,டெய்சி சரணும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்பொழுது பேசிய டெய்சி சரண், ''சமீபத்தில் நடந்த ஆடியோ கிளிப்பிங்ஸ் வலைத்தளத்தில் வைரலாகி எல்லா ஊடகங்களிலும் பரவி வருகிறது. பாஜக கட்சியில் இப்படி நடந்ததா? என்பது போல் பரவி வருகிறது. இந்தக் கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு மிகப்பெரிய இடத்திற்குச் சென்றுள்ளனர். இதுவரைக்கும் அம்மா, அக்கா என்பதைத் தவிர பெண்களை வேறெப்படியும் கூப்பிடுவதில்லை. அப்படி ஒரு கட்சி பாஜக. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் லட்டு கிடைத்த மாதிரி ரொம்ப நிறைய ட்ரோல் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நாங்கள், குறிப்பாக கனக சபாபதி ஐயா கூப்பிட்டு பேசி என்னையும் சிவா அவர்களையும் பேச வைத்தார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி இந்த விஷயத்தை விட்டு விடலாம் என்று முடிவுக்கு வந்து விட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. என்னைப் பொருத்தவரை எனது இறப்புக்கு முன்பாக இந்தியா இப்படி ஒரு பிரதமரை பார்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு பிரதமர் வந்து இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் .ஏதோ கண் பட்ட மாதிரி இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது. உணர்ச்சி வசப்பட்டு எப்படியோ நிகழ்ந்து விட்டது. இதை நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இதில் மனமொத்து அவர் ஆரம்பத்தில் அக்கா என்றுதான் கூப்பிட்டார். நானும் தம்பி என்றுதான் பேசினேன். திரும்பவும் தொடர்ந்து அக்கா தம்பியாக பயணிப்பதாக முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

 

அதன் பிறகு பேசிய திருச்சி சூர்யா, ''அக்கா சொன்ன மாதிரி தனிப்பட்ட இருவருக்குமான உரையாடல். அதில் எங்கள் மாநில தலைவர் சொன்ன மாதிரி தனிப்பட்ட முறையில் இருந்தாலும் சரி, பொதுத் தளத்தில் இருந்தாலும் சரி கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னார். இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சந்திக்கச் சொன்னார்கள். சபாபதி அவர்கள் தலைமையில் நடந்த குழுவில் இருதரப்பும் பங்கு கொண்டு பேசினோம். எந்த மாதிரியான சூழ்நிலையில் வாக்குவாதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் பேசினோம். இதை எழுத்துப் பூர்வமாகவும் நேரடியாகவும் கொடுத்திருக்கிறோம். அக்காவுடைய தரப்பிலிருந்தும் இந்த ஆடியோ போகல. நானும் வெளியேயும் கொடுக்கல. இது வேறு வகையில் வெளியே சென்றுள்ளது. யார் என்பதைக் கட்சி கண்டுபிடிக்கட்டும். கட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வைப்பது என்னுடைய எண்ணம் இல்லை என அக்கா சொன்னாங்க. நானும் என்னுடைய விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறேன். கட்சி ஒருவேளை நான் பேசியது தவறு என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன்'' என்றார்.

 

இந்நிலையில் பாஜக ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யாவை 6 மாதம் கட்சியின் அனைத்துப் பதவியிலிருந்தும் நீக்கி பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.