Skip to main content

“அமைச்சர் பலூன் வெடித்ததுபோல் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெடி வைக்கப்படும்” - கனிமொழி காட்டம்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

kanimozhi election campaign in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் முழுவதும், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,  பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு, பலதரப்பினரையும் சந்தித்து வருகிறார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் போது, முதலமைச்சர் தொடங்கி, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வரை, ஒரு பிடிபிடிக்கிறார். 

 

விருதுநகர் மாவட்டத்தில் கனிமொழி வெளிப்படுத்திய சில கருத்துகள், “தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என ஸ்டாலினை உற்சாகமாக அறிவித்திருக்கிறோம். அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை டெல்லிதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியினரே சொல்கிறார்கள். மோடியா? லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவால் அமைச்சரான ஒருவர், மோடியை டாடி என்கிறார். இந்த அவமானம் தேவையா? 

 

ரேசன் கடை, முகக்கவசம், பால் என அனைத்திலும் ஊழல். இதைக் கேட்டால், பத்திரிக்கையாளர் உட்பட அனைவரையும் சுட்டுவிடுவேன் என்று இங்குள்ள அமைச்சர் மிரட்டுகிறார். தூத்துக்குடியில் கேள்வி கேட்ட 13 பேரை சுட்டுக்கொன்ற அராஜக ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. ராஜேந்திரபாலாஜி பலூன்களை வெடித்ததுபோல், தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெடிவைக்கப் போகிறார்கள் மக்கள். 

 

எடப்பாடியாரை, எடப்பாடி ‘யார்?’ எனக் கேட்கிறார்கள் மக்கள். நீங்கள் அடிக்கல் நாயகர்கள். அடிக்கல் மட்டும்தான் நட்டு இருக்கின்றீர்கள். அ.தி.மு.க.வுக்கு  பதவிவெறி.  அதனால்தான்,  வேளாண் சட்டங்களை, அடிமைகளைப் போல் ஆதரித்துள்ளார்கள். பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட மக்கள் திட்டாமல் இருப்பதற்காகவே, ரூ.2,500 வழங்குகிறார்கள். 

 

லோக்சபா தேர்தலில் தி.மு.க. வாக்கு வங்கி அதிகரித்ததற்கு காரணம், கிராமசபைக் கூட்டங்கள்தான். தி.மு.க. வாக்கு வங்கி குறித்து குறை கூறுவதை விட்டுவிட்டு, அ.தி.மு.க.வினர் அவர்களது வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்ளட்டும். 

 

தாய்மார்கள் ஒவ்வொருவரும், தங்களின் மகளுக்கு ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை வழங்க வேண்டும்” எனப் பேசியுள்ளார். 

 

பொதுவெளியில் கனிமொழி உதிர்க்கும் கருத்துகளில், அரசியலோடு சமூக அக்கறையும் சேர்ந்தே வெளிப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்