
மதுரை ஆலந்தூர் பகுதியில் புறநகர் மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் 2026 தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் , ‘இனி வரும் காலங்களில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இயங்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லப்படுகிறதே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவர்கள் தற்போது எங்கள் கூட்டணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கே இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால் தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும். எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும்” என்று பதிலளித்தார்.
இதனிடையே “ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் பலமுறை உறுதி செய்துவிட்டார். அவருக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.