Skip to main content

“தமிழ் மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” - இ.பி.எஸ்-க்கு கனிமொழி பதிலடி

Published on 07/06/2025 | Edited on 07/06/2025

 

Kanimozhi responds to IPS on constituency delimitation

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இந்த சதித்திட்டத்திற்குத் துணை போவதாக அவரை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தார். 

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல மு.க.ஸ்டாலினின் பதிவிட்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த போதே தெரிவித்தது நான். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்.

கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை. இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதை வைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள்  Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள். ஸ்டாலின் அவர்களே- மடை மாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில்  நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்” என்று காட்டமாக பேசியிருந்தார். 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, “தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தங்கள் சொந்த மாநில நலன்களை கைவிட்டு, தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக டெல்லி எஜமானர்களுக்கு பணிந்து நடப்பவருக்கு, எங்களுக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை.

தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை - நமது விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். அச்சுறுத்தல் எங்கள் வீட்டு வாசலில் உள்ளது. உங்கள் டெல்லி எஜமானர்களிடம் அவர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்று சொல்லுங்கள். எழுதப்பட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கோருவதில்லை. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அரசியலமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாங்கள் குரல் எழுப்புவோம்” என பதிலடி கொடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்