Skip to main content

தங்க நகை கடனுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது ரிசர்வ் வங்கி!

Published on 07/06/2025 | Edited on 07/06/2025

 

Reserve Bank relaxes restrictions on gold and jewelry loans

தங்க நகைகள் அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடைமுறைகளை சில தினங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில், தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும், அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வங்கிகள் (அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்றும், கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை வெளியிட்டிருந்தது. 

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு சு.வெங்கடேசன் எம்.பி. அளித்திருந்தார். இதையடுத்து பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் நகைக் கடங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. 

இந்த நிலையில், தங்க நகை கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதில், தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும், நகைக்கான ரசீது தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும் என்றும், ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை என்றும், முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்