Skip to main content

"இதுதான் திமுகவில் உறுப்பினராக தகுதிபோல" - சிறை வாசலில் ஜெயக்குமார் கிண்டல்

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டன.  

 

மூன்று வழக்குகளிலும் தற்போது ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில், இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். திமுக அரசுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி வந்த அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "பொய் வழக்குகள் போடுவது, அதிமுக தொண்டர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுவது மூலம் எப்படியாவது கழகத்தை ஒழித்து அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அந்த வகையில், என் மீது ஒரு பொய் வழக்கு போட்டுள்ளார்கள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ராயபுரம் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளாக 40 சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து வாக்குச்சாவடி மையத்தை கைப்பற்றினார்கள். இது சட்டத்திற்கு விரோதமான விஷயம். இதை காவல்துறை தடுக்காத சூழலில், ஜனநாயக ரீதியில் உள்ளே சென்று நாங்கள் தடுக்க முயற்சித்தோம். அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் ஓடும்போது, கட்சிக்காரர்கள் அவர்களை அழைத்து வருகின்றனர். நாங்கள் பிடித்தவர் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுதான் திமுகவில் உறுப்பினராக தகுதிபோல. அவரை எங்கள் கட்சிக்காரர் என ஸ்டாலினே சான்றிதழ் கொடுத்துள்ளார். நாங்கள் யாரும் அவரை அடிக்கவில்லை. காவல்துறை தன்னுடைய கடமையைச் செய்திருந்தால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

 

மேலும் அவர் பேசுகையில், காவல்துறை செய்ய வேண்டிய கடமையை நான் செய்தபோது விருப்புவெறுப்பிற்கு அப்பாற்பட்டு முதலமைச்சர் என்னை பாராட்டியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.   

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அந்த இரண்டு பேரையும் 62 பேரின் ஆவி சும்மா விடாது' - அதிமுக ஜெயக்குமார் பேட்டி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'The spirit of 62 people will not leave those two people alone' - ADMK Jayakumar interviewed

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அதேபோல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், ''இந்த அரசு நினைத்திருந்தால் இந்த கள்ளச்சாராய மரணத்தை தடுத்திருக்கலாம். ஆனால் திமுக அரசு இதில் அக்கறை காட்டவில்லை. எக்கேடு கெட்டுப் போனால் என்ன என நமக்கு வேண்டியது மூன்று தான் கமிஷன்; கலெக்சன்; கரப்ஷன் என இந்த மூன்றும் இருந்தால் போதும் என யார் குடித்தால் என்ன; யார் சத்தால் என்ன; சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வந்தால் என்ன; ஆள் கடத்தல் நடந்தால் என்ன; கட்டப்பஞ்சாயத்து நடந்தால் என்ன என விட்டு விட்டார்கள். அப்படித்தான் இன்று முதல்வருடைய செயல்பாடுகள் இருக்கிறது. அப்படித்தான் அரசாங்கத்தின் செயல்பாடும் இருக்கிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் அங்குச் சென்று பார்த்துவிட்டு இரண்டு மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை எனத் தெரிவித்தார். மெத்தனால் என்பது ஒரு கொடிய விஷம். அதைச் சாப்பிட்டாலே கண் போய்விடும். உடலுறுப்புகள் செயலிழக்கும். அந்தக் குறிப்பிட்ட இரண்டு மருந்துகள் இருந்தால் உயிரிழப்பு கண்டிப்பாகக் குறைந்திருக்கும். அந்த மருந்துகள் மருத்துவமனையில் இல்லை எனச் சுட்டிக்காட்டினால் அதை ஒற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு வியாக்கியானம் செய்து 62 பேர் உயிரிழந்துள்ளனர். 62 பேரின்  ஆவி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுவையும், ஸ்டாலினையும் விடாது சும்மா விடாது. இரவில் வந்து உங்களால்தான் செத்தோம் எனச் சொல்லி மிரட்டும். அப்படித்தான் ஆகும் நிலைமை. எதிர்க்கட்சி சுட்டிக் காட்டினால் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒத்துக் கொள்ளும் தன்மை திமுகவிற்கு கிடையாது'' என்றார்.

Next Story

“விஜய்யை தவிர மீதமுள்ள நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்?” - ஜெயக்குமார் விமர்சனம் 

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Former Minister Jayakumar condemns tamil actors

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு‌ அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.