Skip to main content

அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Government job fraud! AIADMK union secretary paid video evidence!

 

அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி. இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர். 

 

விஜய நல்லதம்பி சிவகாசி தாயில்பட்டி அருகே கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 ½ லட்சம் வாங்கினார்.  கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரையும், கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமியின் கணவர் கணேசனும், விஜய நல்லதம்பியின் சொந்த ஊரான ராமத்தேவன்பட்டியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்தனர். 

 

கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரை, விஜயநல்லதம்பியிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தார்.  அப்போது, "உன் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் போஸ்டிங் வாங்கித் தர்றேன். மூன்றரை லட்சம் கொடு. வேலைக்கான ஆர்டர் வாங்கித் தர்றேன்" என்று விஜய நல்லதம்பி கூற,  தங்கதுரையும்  நம்பிக்கையோடு கொடுத்துள்ளார்.  

 

கிருஷ்ணவேணியும் தங்கதுரையும்  தாயில்பட்டி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சமும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 1.5 லட்சமும் திரட்டியுள்ளனர். மொத்த பணத்தையும் விஜய நல்லதம்பியிடம் கொடுத்தபோது,  உடன் சென்ற கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், யாருக்கும் தெரியாமல் தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தார்.

 

நெடுநாட்களாகியும் சத்துணவு அமைப்பாளர் வேலையும் வாங்கித் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல்  அலையவிட்ட விஜய நல்லதம்பி அந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார்.  பிறகு அரசு வேலைக்காக பணம் கொடுத்தபோது  தம்பி சதீஷ் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரிடம் புகார் அளித்தார் கிருஷ்ணவேணி. 

 

காவல்துறையின் விசாரணையில், குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அந்த வீடியோவில் விஜய நல்லதம்பி என்ன பேசியிருக்கிறார் என்றால்,  “14-ஆம் தேதி இன்டர்வியூ. 15-ஆம் தேதி ஆர்டர் காபி வந்திரும். அமைச்சருக்கு கொடுக்கணும். விருதுநகர் கலெக்டரே வாங்குறாரு. மூன்றரை லட்சத்தை கம்பல்சரியா கொடுத்தாகணும்.” என்று அளந்துவிடுகிறார். அப்போது  பணம் கொண்டு வந்தவர்கள், “எந்த திசையைப் பார்த்து பணம் கொடுக்கணும்? என்று கேட்கிறார்கள். அதற்கு  விஜய நல்லதம்பி,   “மனசு நல்ல மனசா இருந்தா போதும்” என்று சொல்கிறார். 

 

கிருஷ்ணவேணி தொடர்ந்த இந்த வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.  அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய நல்லதம்பி மேல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆட்சேபனை தெரிவித்ததால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.  

 

உயர்நீதிமன்ற வேலைக்கு ஆர்டர் வாங்கித் தருவதாகவும் விஜய நல்லதம்பி மோசடி செய்திருக்கிறார்.  தன்னுடைய சொந்த அண்ணன் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளி மீது  ரூ.70 லட்சம் மோசடி புகார் கொடுத்தார் விஜய நல்லதம்பி. அது பொய்யான வழக்கென்று சாட்சியங்கள் மூலம் நிரூபணமானது. இந்த விஜய நல்லதம்பி தான் ரூ.3 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தெறிக்கவிட்டார். ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி கைதாகி சிறையில் அடைபட்டதும் இன்றுவரையிலும் நிபந்தனை ஜாமீனில் அல்லாடுவதும்  இந்த விஜய நல்லதம்பியின் கைங்கரியத்தினால்தான்.  

 

தன் மீதான குற்றச்சாட்டுக்கு விஜய நல்லதம்பி அளித்த விளக்கம் இது - “அரசியல்ல இருந்தா யாராவது ரெண்டு பேர் புகார் கொடுக்கத்தான் செய்வாங்க. அரசு வேலைக்கு மத்தவங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுக்குறது மட்டும்தான் எனக்கு பொழப்புன்னு கிடையாது. எங்கே தொலைச்சோமோ, அங்கேதானே தேட முடியும். எல்லா பழியவும் என்மேல போடறாங்க.” என்கிறார். பலே தில்லாலங்கடியாக இருக்கிறார் விஜய நல்லதம்பி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.