Skip to main content

திமுக இளைஞரணி மாநாடு; ஜொலிக்க வைத்த டிரோன்களின் காட்சி!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
DMK Youth Conference A display of drones made to shine

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இதன் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது.

திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர். 

சார்ந்த செய்திகள்