Skip to main content

நான் பரம்பரை பணக்காரன்... டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியமில்லை... அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரசியல்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியும் ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.

அதனால் இப்போதைய அரசியலைவிட வருங்கால அரசியலிலும் கட்சித் தலைமையிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் இறங்கி விட்டார் சண்முகம்.

இதற்கு அச்சாரமாக மாவட்டம் முழுவதும் இருக்கும் கட்சிப் பதவிகளில் இருப்பவர்களை கடாசி விட்டு, தனது விசுவாசிகளுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்கி வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த ராஜரத்தினம், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மாஜி எம்.பி. ஏழுமலை, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, வக்கீல் அணி செயலாளர் கொடுமுடி சேரலாதன், ஐ.டி. விங் மணவாளன், ஒலக்கூர் ஒ.செ.ராஜேந்திரன், விக்கிரவாண்டி ஒ.செ. சேவல்வேலு, செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜ், மரக்காணம் பேரூர் செயலாளர் கணேசன் ஆகியோரின் பதவிகளுக்கு வேட்டு வைத்துவிட்டார் சண்முகம்.
 

admk



மா.அ.த.வாக செஞ்சி கண்ணன், எம்.ஜி.ஆர். ம.செ.வாக எஸ்.பி.ராஜேந்திரன், மா.து.செ.வாக மரக்காணம் கணேசன், மகளிரணி செயலாளராக கிளியனூர் தமிழ்ச்செல்வி, இவர்கள் தவிர மாணவரணி, ஐ.டி. விங், வக்கீல் அணி, விவசாய அணி என அனைத்துப் பதவிகளுக்கும் தனது விசுவாசிகளின் பட்டியலைக் கொடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் ஒப்புதலுடன் கடந்த 27-ஆம் தேதி பட்டியலையும் ரிலீஸ் பண்ணிவிட்டார் சண்முகம்.

அதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வரும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து தனது ஆட்களுக்கு பதவிகளை அள்ளி வழங்கி ஆனந்த மடைந்திருக்கிறார் சண்முகம். ஆனால் பதவி இழந்தவர்கள் மத்தியில் ஆங்காரமும் கோபமும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சண்முகத்தால் பதவி பறிக்கப்பட்ட செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜனின் தந்தை ரங்கநாதன், நீண்ட நெடுங்காலமாக அ.தி.மு.க.வில் இருப்பவர், வசதி வாய்ப்புகளுக்கும் குறைவில்லாதவர். செஞ்சி பகுதியில் செல்வாக்கு மிக்கவர்.

சமீபத்தில் செஞ்சியிலிருந்து களவாய்—-சேத்துப்பட்டு ஊர்களை இணைக்கும் சாலைக்கான டெண்டருக்கு விண்ணப்பம் போட்டார் ரங்கநாதன். ஆனால் அமைச்சர் சண்முகத்தின் கைங்கர்யத்தால் தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதனால் கடுப்பான ரங்கநாதன், சமீபத்தில் செஞ்சி அரசு விருந்தினர் விடுதியில் இருந்த அமைச்சர் சண்முகத்திடம் கேட்டபோது, அலட்சியமாகப் பேசினாராம் அமைச்சர்.

 

admk



இதனால் மேலும் உஷ்ணமான ரங்கநாதன், “நான் பரம்பரை பணக்காரன், சாலைப் பணி தரமா இருக்கணும்தான் டெண்டர் போட்டேன். இந்த டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியம் இல்லை'' என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறி விட்டாராம்.


நாம் விழுப்புரம் நகர சீனியர் ர.ர.ஒருவரிடம் பேசியபோது, "எங்க அம்மா மற்றும் சின்னம்மாவின் ஆசியுடன் டாக்டர் லட்சுமணன் மா.செ.வாகி, ராஜ்யசபா எம்.பி.யுமானார். கட்சிக்குள் அவரின் திடீர் ஸ்பீடால், சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பேர் லட்சுமணனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அம்மா மரணம், சின்னம்மா ஜெயில்ல என நிலைமை மாறியதும் சண்முகத்தின் கை ஓங்கியது, போனவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்கள். விழுப்புரம் தெற்கு மா.செ. குமரகுரு எப்போதுமே எடப்பாடியின் நிழவில் இருப்பவர். ஆனால் சண்முகமோ தன்னை தனித்துக் காட்டவேண்டும் என நினைப்பவர். அமைச்சருக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்துவது அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் தான்'' என்றார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்தின் சடுகுடு அரசியல் ஜரூராக நடக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.