Skip to main content

“ஒழுங்கீனமும் முறைகேடும் நடந்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Chief Minister M.K.Stalin gave a stern warning in the conference of local body representatives.

 

“ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். 

 

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டை பகுதியில், திமுகவைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது; “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைய பெண்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நீங்களே கையாள வேண்டும். தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடம் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நடை; நேர்கொண்ட பார்வை; நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர்களாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். 


சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சி ரீதியாக மட்டுமல்ல; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக மாறிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். அனைவரின் கருத்தையும் கேட்டு, அவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படுவதுதான் ஜனநாயகம். யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகம் அல்ல. அப்படி நான் மாறிவிடவும் இல்லை. 


ஒழுங்கீனமும், முறைகேடும் தலை தூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி,  இங்குள்ள அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பாளத்தில் வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி எனக்குத் தரப்படவில்லை. 50 ஆண்டு கால உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பின் பயன் இது. 


என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே திமுக கையில்தான் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்து விடக்கூடாது. 


யாரோ ஒரு சிலரின் தவறான செயல்களின் காரணமாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானோ, கோடிக்கணக்கான தொண்டர்களோ அவமானத்தால் தலை குனியக் கூடிய நிலையை யாரும் உருவாக்கி விடக்கூடாது என தாழ்மையோடு உங்களை கேட்டுக்கொள்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாம். உங்களில் ஒருவனான எனது சகோதர, சகோதரிகள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்படுங்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழினத்தின் இனமானம் காக்க, சுயமரியாதை காக்க, முற்போக்கு சிந்தனையோடு பேரறிஞர் அண்ணாவின் பின்னாலும் கலைஞர் பின்னாலும், ஏன்... இன்று என் பின்னாலும் அணி திரண்டு இருப்பவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 


பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை கழகத்தினருக்கு அழகு. இதை கட்டளையாகச் சொன்னார்கள். இந்த மூன்றையும் மூச்சென கடைபிடியுங்கள். உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வந்திருக்கக் கூடிய உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் ஒற்றுமையோடு இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அப்படி ஒற்றுமை இல்லாவிட்டால் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போய்விடும். மேயரும், துணை மேயரும் பேச மாட்டார்கள். நகராட்சித் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் ஆகாது. பஞ்சாயத்துத் தலைவருக்கு உள்ளேயே பஞ்சாயத்துதான். இந்த செய்திகள் எல்லாம் என் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கு அறவே இடம் கொடுக்கக் கூடாது. உங்களில் சிலருக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் மக்கள் பணி ஆற்றுங்கள். ஒற்றுமையாக இருங்கள். ஊருக்காக உழையுங்கள்.


சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, மொழிப்பற்று, இன உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கொண்டதுதான் இந்தியா. அடிப்படை கருத்தியலைக் கொண்டதுதான் திராவிட இயக்கம். அந்த கருத்தியலை உள்வாங்கி செயல்படக்கூடிய திராவிட மாடல் அரசுதான் இந்த அரசு. இந்தக் கோட்பாடுகளை நீங்கள் முழுமையாக அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும். 


நகராட்சி தலைவருக்கு, பேரூராட்சி தலைவருக்கு, வார்டு கவுன்சிருக்கு இவையெல்லாம் எதற்கு என்று நீங்கள் யாரும் கருத மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன். திராவிட இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் இந்த கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதை செயல்படுத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். சாலைகள் போடுவதோ, தண்ணீர் தொட்டி கட்டுவதோ, பாலங்கள் கட்டுவதோ, கழிவுநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான பணிகளோடு உங்கள் பணி முடிந்து விடுவதில்லை. சமத்துவப் பாதைகள் அமைப்பதும், சகோதர பாதை அமைப்பதும், சமூகத்தின் கழிவுகளை துடைப்பதும் உங்கள் கடமைதான். அதனால்தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். நம் இலக்குகளை நோக்கி உழையுங்கள். 


அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று அடிக்கடி சொல்லி வருவது இதுதான். அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று நீங்கள் பேச முடியாது; கீழடியில் 3200 ஆண்டுக்கு முன்பே தமிழன் எழுத்தறிவோடு இருந்தான் என்று பெருமை பேச முடியாது. 


பெரியார் பிறந்த நாளன்று சமூகநீதி உறுதிமொழியையும், அம்பேத்கர் பிறந்த நாளன்று சமத்துவ நாள் உறுதொழியையும் எடுத்துக்கொள்ளும் தகுதியை நாம் பெற்றாக வேண்டும். இந்த தகுதியை கொண்டவர்கள்தான் திமுகவை சேர்ந்தவர்கள். எது திராவிட மாடல் என்று கேட்பவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில். பதவி, பட்டம், பொறுப்பு, மாலை, பாராட்டு ஆகிய எல்லாமே கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய பாதையில் வந்து போகின்றவை. கொள்கையும் கோட்பாடும்தான் நிரந்தரமானது.  


பெரியார், அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியோர் தங்களை மறந்து தமிழ்ச் சமூதாயத்திற்காக உழைத்தார்கள். அவர்களின் உழைப்பால் உருவான இயக்கம், இந்த இயக்கம். இது இயக்கம். அதனால்தான் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது இயக்கம், தமிழ்நாட்டின் தமிழினத்தின் விடியலுக்காக இருந்தாக வேண்டும். இந்தக் கழகம் உருவாக்க நினைப்பது, தலை நிமிர்ந்த தமிழகம். உன்னதமான தமிழகம். அனைத்திலும் மேம்பட்ட தமிழகம். அத்தகைய தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். 


இந்த ஓராண்டு காலத்தில், தேர்தல் அறிக்கையில் சொன்னது போல 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதெல்லாம் சரித்திர சாதனைகள். இந்த சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் திட்டங்களால் பலன் பெற்ற மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள். தெருமுனைக் கூட்டம் போடுங்கள். 


நாம் பெற்றிருப்பது பதவி அல்ல; பொறுப்பு. பதவி என்பது தோளில் போடக்கூடிய  துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டக்கூடிய வேட்டி என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணன் காட்டிய பாதைதான் நமது பாதை. அந்தப் பாதையில் மக்கள் உறுதியேற்றுக் கொள்ளுங்கள். மக்களின் பாராட்டைப் பெறுங்கள். திமுகவுக்கும் தமிழகத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தாருங்கள்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.