Skip to main content

மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் மரியாதை!

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

World leaders honor Mahatma Gandhi memorial

 

இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

 

நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்ததுள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 

 

World leaders honor Mahatma Gandhi memorial

 

இந்த நிலையில் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்வாக ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராஜ்காட்டுக்கு வருகை புரிந்த அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி, கதர் சால்வை அணிவித்து வரவேற்று, காந்தியின் புகைப்படங்கள், அவரது நினைவுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து தலைவர்களுக்கு எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பாரத் மண்டபத்தில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்