Skip to main content

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி!

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

 

Peace restored on India Pakistan border

ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும் நேற்று இரவு 10.30 மணியளவில் எல்லை தாண்டி இந்தியா மீது 11 இடங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக எல்லைக்கோட்டுப் பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருக்கிறது. அதன்படி ஜம்மு நகரச் சாலைகள் அமைதியாகக் காட்சி அளிக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிறுத்தத்தால் இரு நாட்டு எல்லையிலும் அமைதி திரும்பி உள்ளது. ஜம்மு - காஷ்மீர், பூஞ்ச், அக்னூர் மற்றும் ரஜோரி உள்ளிட்ட எந்த ஒரு பகுதிகளிலும் ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதே போன்று பஞ்சாப்  மாநிலத்தின் பதான்கோட், ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட இடங்களிலும் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது. இரவில் ட்ரோன்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் எதுவும் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்