Skip to main content

பயனர்களுக்கு எதிரான நடவடிக்கையில் வாட்ஸ்அப் - நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

whatsapp

 

வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதற்கு வாட்ஸ்அப் பயனர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

 

இதனால் வாட்ஸ்அப், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்த மாற்றத்தை அமல்படுத்துவதை மே 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இதன் தொடர்ச்சியாக மாற்றப்பட்ட வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகள் கடந்த மே 15ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தன.

 

இதனையடுத்து வாட்ஸ்அப், அதன் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்தைத் திரும்பப் பெறவோ, அல்லது அந்த மாற்றங்களைப் பயனர்கள் ஏற்காமல் இருப்பதற்கு வாய்ப்பளிக்கவோ அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட மத்திய அரசை அறிவுறுத்தும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்தநிலையில், மத்திய அரசு இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், "புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளுக்குப் பயனர்களிடமிருந்து தந்திரமாக ஒப்புதல் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப், பயனர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என மத்திய அரசு வாட்ஸ்அப்பை குற்றஞ்சாட்டியுள்ளது. 

 

மேலும் மத்திய அரசு அதன் பிரமாண பாத்திரத்தில், "வாட்ஸ்அப் அதன் டிஜிட்டல் வலிமையை தற்போதுள்ள பயனர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (பி.டி.பி) மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, வாட்ஸ்அப் தற்போதுள்ள பயனர்களைப் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும்" எனவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மழை பாதிப்பு; உதவிக்கு வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
WhatsApp number to report rain damage; Tamil Nadu Government Notification

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இந்த நிலையில், மழை பாதிப்பை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பு, உதவி தேவைகளை மக்கள் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் @tn_rescuerelief என்ற எக்ஸ் தள பக்கத்திலும் தங்களது குறைகளை தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.