
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொள்ள உள்ளார். குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளவும், இறந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கீர்த்திவர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்துள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் குவைத் நாட்டிற்குச் செல்வோம். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.